சென்னை: கோயம்பேடு மார்கெட் வளாகம், சென்ட்ரல் ரயில் நிலையம், பொழுதுபோக்கு இடங்களான மெரினா கடற்கரை, பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில், முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றியும் பலர் சுற்றித் திரிகின்றனர். இவ்வாறு விதிமீறும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு அபராதம் விதித்து வருகின்றனர். இந்நிலையில், கோயம்பேடு வணிக வளாகம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் பொதுமக்கள், வியாபாரிகள் கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என 127வது வார்டு மாநகராட்சி சுகாதார அலுவலர் சக்திவேல் தலைமையில் ஊழியர்கள் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பாதுகாப்பு விதிகளை மீறியதாக சுமார் 200க்கும் மேற்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு சுமார் ரூ.500 முதல் ரூ.1000 வரை அபராதம் விதிக்கப்பட்டது. அதன்படி, மொத்தம் ரூ.2 லட்சம் வரை அபராதம் வசூலிக்கப்பட்டது.