சென்னை: மின்வாரியத்தில் காலியாகவுள்ள இளநிலை பொறியாளர் இரண்டாம் நிலை (ஜெஇ-2) மின்னியல் பதவிகளை உடனடியாக நிரப்பிட வேண்டும் என தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து தொழிற்சங்கத்தினர், மின்வாரிய தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தற்போது சுமார் 1,200 இளநிலை பொறியாளர் இரண்டாம் நிலை (ஜெஇ-2) மின்னியல் பதவிகள் காலியாகவுள்ளது. மேலும் பல புதிய 110 கே.வி துணை மின்நிலையங்களுக்கான ஜெஇ-2 புதிய பதவிகள் பல மாதங்களாக அனுமதிக்கப்படாமல் நிறுவையில் இருந்து வருகிறது.
இந்த காலியாக உள்ள இளநிலை பொறியாளர் இரண்டாம் நிலை மின்னியல் பதவிகளை நிரப்ப பட்டயம் படித்த 566 தொழில் நுட்ப உதவியாளர்களுக்கு தகுதிக்காண் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. மேலும் பட்டயம் அல்லாத களப்பிரிவு தொழிலாளிக்கும் தகுதிக்காண் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. மினவாரிய சர்வீஸ் ரெகுலேசன் அடிப்படையில் தற்போது உள்ள 1,200 காலியிடங்களில் தொழில் நுட்ப உதவியாளர்களுக்கு முதல் மூன்று காலியிடங்கள் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 900 காலி இடங்களை ஒதுக்கீடு செய்து தகுதிகாண் அறிக்கை கேட்கப்பட்ட 566 நபர்களில் தகுதியான அனைவருக்கும் ஜெஇ-2 பதவி உயர்வு வழங்கிட வேண்டும்.
இதேபோல் மின்வாரிய சர்வீஸ் ரெகுலேசன் பிரிவு அடிப்படையில் தற்போது உள்ள 1,200 காலியிடங்களில் பட்டயம் அல்லாத களப்பிரிவு தொழிலாளிக்கு நான்காவது காலியிடம் ஒதுக்கீடு என்ற அடிப்படையில் 300 காலி இடங்களை ஒதுக்கீடு செய்து, பட்டயம் அல்லாத களப்பிரிவு தொழிலாளிக்கு தகுதிகாண் அறிக்கை கேட்கப்பட்ட நபர்களில் தகுதியான அனைவருக்கும் (300) ஜெஇ-2 பதவி உயர்வு வழங்கிட வேண்டும். மேலும் காலியாக உள்ள 1200 ஜெஇ-2 பதவியின் முறைப்பணிகள் முழுவதையும் களப்பிரிவில் பணியாற்றி வரும் முகவர் மற்றும் சிறப்பு நிலை முகவர்கள் தற்போது கூடுதல் பணிச்சுமையோடு பணிசெய்து வருகின்றனர். இந்த சூழலில், தற்போது சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க வாய்ப்பு உள்ளதால், வரும் பிப்ரவரி 10ம் தேதிக்குள் மேற்கண்ட பதவி உயர்வுகளை வழங்கிட கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.