கூடுவாஞ்சேரி, ஜன 24: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் மற்றும் மண்ணிவாக்கம் ஆகிய ஊராட்சிகளில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில், திமுக சார்பில் கிராம மக்கள் சபை கூட்டம் நடந்தது. வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், மாவட்ட பிரதிநிதி எம்.டி.சண்முகம், முன்னாள் ஒன்றிய குழு துணை தலைவர் தேவேந்திரன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஏ.ஜெ.ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இளைஞரணி துணை அமைப்பாளர் சத்யநாராயணன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக எம்பி செல்வம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன், தலைமை கழக பேச்சாளர் ஆரணி மாலா ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். அப்போது பொதுமக்கள், ஊராட்சி முழுவதும் பன்றி தொல்லை அதிகமாக இருக்கிறது.
குப்பை கழிவுகள் மற்றும் கழிவுநீர் தேங்கி கிடப்பதால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதில், கொசு உற்பத்தியாகி கடும் அவதியடைகிறோம். இதுபற்றி பலமுறை புகார் அளித்தும், நடவடிக்கை இல்லை. மேலும், அதிமுக கூட்டத்துக்கு மகளிர் சுய உதவி குழுக்களை மிரட்டி அழைத்து செல்கின்றனர் என சரமாரியாக புகார் கூறினர். அவர்களிடம், எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் பேசுகையில், மகளிர் சுய உதவி குழுக்களை மிரட்டி ஓட்டு கேட்கும் அதிமுகவின் முயற்சி ஒருபோதும் பலிக்காது. திமுக ஆட்சிக்கு வந்த 3 மாதத்தில் இலவச வீட்டுமனை பட்டா அனைவருக்கும் வழங்கப்படும். 100 நாள் வேலை திட்டம் 200 நாளாக உயர்த்தப்படும்.’’ என்றார். முன்னாள் ஊராட்சி தலைவர்கள் எம்.டி.லோகநாதன், குணசேகரன், ராஜேந்திரன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ஏ.வி.எம்.இளங்கோவன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.