×

கோட்டைப்பட்டினம் வந்த 4 மீனவர்கள் உடல்: அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியர், சக மீனவர்கள் உள்ளிட்டோர் மலர்தூவி அஞ்சலி

புதுக்கோட்டை: அறந்தாங்கி: இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட 4 மீனவர்களில் 2 மீனவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து கடந்த 18ம் தேதி ஆரோக்கியசேசு என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் செந்தில்குமார் (32), மெசியா (30), நாகராஜ் (52), சாம்சன் டார்வின் (28) ஆகிய 4 மீனவர்களை நடுக்கடலில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் கப்பலால் மோதி விசைபடகை உடைத்து 4 மீனவர்களை அடித்துள்ளனர். இதில் சேதமடைந்த படகு கடலில் மூழ்கி 4 மீனவர்களும் பலியாயினர். 3 மீனவர்களின் உடல்களில் பலத்த காயங்கள் உள்ளது.

ஒரு மீனவரின் உடலில் கெமிக்கல் ஊற்றியதுபோல் கொப்பளித்து உள்ளது. 4 மீனவர்களின் உடல்களையும் இலங்கை கடற்படையினர் கடலில் இருந்து மீட்டு யாழ்ப்பாணம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மீனவர்களின் உடல்களில் காயங்கள் உள்ளதால் 4 மீனவர்களையும் இலங்கை கடற்படை அடித்து கொன்றதாக தமிழக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில், இலங்கையில் மல்லாகம் நீதிமன்றம் உத்தரவின்பேரில் 4 மீனவர்களின் உடல்களும் நேற்று பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதையடுத்து, 4 பேரின் உடல்களையும், கொண்டு வந்து சர்வதேச கடல் எல்லையில் நேற்றிரவு இந்திய கடற்படையிடம் இலங்கை கடற்படை ஒப்படைத்தது.

இதையடுத்து, 4 மீனவர்களின் உடல்களையும் இந்திய கடற்படையினர் கொண்டு வந்து இன்று மதியம் புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே, கோட்டைப்பட்டினம் மீனவர்களிடம் மீன்வளத்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஒப்படைத்தனர். கோட்டைப்பட்டினம் மின்படி தளத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் சக மீனவர்கள் இறந்த மீனவர்களின் உடல்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து மண்டபம், தங்கச்சிமடம், உச்சிப்புளி, திருப்புல்லாணி என மீனவர்களின் சொந்த ஊர்களுக்கு தனித்தனி ஆம்புலன்ஸ்களில் உடல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இந்நிலையில் 4 மீனவர்களில் 2 மீனவர்களின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. செந்தில்குமார், நாகராஜ் ஆகிய 2 மீனவர்களின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.


Tags : fishermen ,Collector ,Kottaipattinam , Body of 4 fishermen from Kottaipattinam: Minister Vijayabaskar, Collector, fellow fishermen pay floral tributes
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...