சென்னை: மத்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வள அமைச்சர் நேற்று செனனை வந்தார். அவரை தமிழக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் சந்தித்து மனு அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:
மத்திய அரசு உதவி பெறும் திட்டமான கால்நடை நலன் மற்றும் நோய் தடுப்பின் கீழ் மத்திய அரசின் பங்கான 3.47 கோடியை விடுவிக்க வேண்டும். மாநிலத்தில் கோழியினங்களின் ஏற்றுமதியை அதிகரிக்கும் பொருட்டு புதிய 3+ தரம் கொண்ட உயிரியல் பாதுகாப்பு ஆய்வகம் தமிழகக்தில் நிறுவ வேண்டும். இதற்கென 103.45 கோடி நிதியை வழங்க வேண்டும். மேலும், மாநிலத்தில் கோமாரி நோய் தடுப்பு பணியை தடையின்றி செயல்படுத்திட கோமாரி நோய் தடுப்பூசி உற்பத்தி ஆய்வகத்தினை ராணிப்பேட்டையில் உள்ள கால்நடை நோய் தடுப்பு மருந்து நிலையத்தில் 146.19 கோடியில் நிறுவ மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடைகளின் ஆரோக்கியம் மற்றும் இனப்பெருக்க திறனை மேம்படுத்தும் நோக்கத்துடன் 69.92 கோடியில் தாது உப்பு கலவை உற்பத்தி ஆலையை நிறுவவும், 87.33 கோடியில் உறைவிந்து உற்பத்தி நிலையத்தினை வலுப்படுத்தவும் கால்நடை பராமரிப்புத்துறைக்கு நிதி உதவி வழங்க வேண்டும். தமிழகத்தில் புதிய கால்நடை நிலையங்களை கட்டவும், கூடுதல் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் மற்றும் சமூக கால்நடை காப்பிடங்கள் கட்டவும், 311.31 கோடி வழங்க வேண்டும். . தமிழகத்தில் நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை 102.76 கோடியிலும், கால்நடை மற்றும் விலங்கின அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்திற்கான கூடுதல் நிதியாக 185.71 கோடியும் மத்திய அரசு வழங்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றியங்களுக்கும் நடமாடும் கால்நடை மருத்துவ சேவைகளை வழங்கிட 90.09 கோடி வழங்க வேண்டும் உள்பட தமிழகத்திற்கு 1,463.86 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு நிதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.