×

200 தொகுதிக்கும் குறையாத வெற்றியை குவித்து கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கிடுவோம்: தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: 200  தொகுதிகளுக்குக் குறையாத இணையிலா வெற்றியைக் குவித்து, அதனை கலைஞரின் ஓய்விடத்தில் காணிக்கையாக்கிடுவேம் என்று ெதாண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:  தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் பழனிசாமியின் தொகுதியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றேன். சொந்தத்  தொகுதி மக்களுக்கே அவர் எதுவும் செய்யவில்லை என்பதை எடப்பாடியில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தின் போது தெரிந்து கொண்டேன். பட்டதாரி இளைஞர்களும் பெண்களும் திமுகவை நம்பி வழங்கிய மனுக்களும் வேலைக்காகப்  பதிவு  செய்து விட்டு, முதலமைச்சரின் தொகுதியில் மட்டும் காத்திருக்கும் 9,600 பேரின் விண்ணப்பங்களுமே எடுத்துக் காட்டுவதாக இருந்தன.

நாமக்கல் மாவட்டத்தில் அமைச்சர் தங்கமணி தொகுதிக்குட்பட்ட குமாரபாளையம் தொகுதி-பாதரை ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றேன். சாயப்பட்டறைகளின் கழிவுகள் நிறைந்த பகுதி என்பதால் அனைத்து  மக்களின் நலன் காக்கும் வகையில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என உறுதிமொழி கொடுத்து வாக்குப் பெற்று வெற்றி பெற்ற தங்கமணி, தனக்கு வேண்டிய ஒரு சில பட்டறைகளின் நலனுக்காக மட்டும் சுத்திகரிப்பு நிலையம்  அமைத்ததையும் - அமைக்கப்போவதையும் பெருவாரியான மக்கள் இன்னமும் சாயக்கழிவுகளின் பாதிப்பிலிருந்து மீள முடியாமல் இருப்பதையும் பெண்கள் சொன்னார்கள்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதிக்குட்பட்ட விராலிமலையில் கிராமசபைக் கூட்டம் நடந்தது.குட்கா-குவாரி- கொரோனா என, எங்கும்-எதிலும் ஊழல் ஒன்றே லட்சியமாகக் கொண்டு வாழும் அமைச்சர்  விஜயபாஸ்கரின் தகிடுதத்தங்களைத் தொகுதி மக்கள் நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள் என்பதை அந்தக் கூட்டத்தில் காண முடிந்தது.

 ஜனவரி 20ம் தேதி  தேனி மாவட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் போடி தொகுதிக்குட்பட்ட அரண்மனை புதூர் என்ற இடத்தில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டேன். ஜனநாயகப் போர்க்களமான தேர்தல்  களத்தில் ஓ.பி.எஸ்ஸை வீழ்த்துவதற்கு அவரது சொந்தத் தொகுதி மக்கள் ஆயத்தமாகிவிட்டார்கள் என்பதை போடி தொகுதியில் நடந்த மக்கள் கிராம சபைக் கூட்டம் காட்டியது.  மதுரையில் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை அமையாவிட்டால் தனது பதவியை ராஜினாமா செய்வதாகச் சொன்னவர் அமைச்சர் உதயகுமார். அடிக்கல் நாட்டியதுடன் அப்படியே கிடக்கும் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை திட்டத்தை நிறைவேற்ற அவர் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை; ராஜினாமாவும் செய்யவில்லை.

 16,500 மக்கள் கிராம வார்டு சபைக் கூட்டங்கள் எனக் கழகம் தீர்மானித்த நிலையில், எதிர்பார்ப்புக்கும் அதிகமாக பல இடங்களில் மக்களின் ஆதரவுடன் எழுச்சிமிகு கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஜனவரி 23ம் தேதி (இன்று) திருவள்ளூர்  மேற்கு மாவட்டத்திற்குட்பட்ட  திருத்தணி சட்டமன்றத் தொகுதியிலும், சென்னை தெற்கு மாவட்டம் - மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியிலும் நடைபெறவுள்ள கிராம சபைக் கூட்டங்களில் மக்களைச் சந்திக்கிறேன். அத்துடன், மக்கள் கிராம  சபைக் கூட்டங்கள் நிறைவடைகின்றன. விரைவில், அடுத்த கட்டப் பரப்புரை குறித்த முக்கிய அறிவிப்பினை வெளியிட இருக்கிறேன். 200 தொகுதிகளுக்குக் குறையாத இணையிலா வெற்றியைக் குவித்து, அதனை தலைவர் கலைஞரின்  ஓய்விடத்தில் காணிக்கையாக்கிடும் ஒற்றை இலக்குடன் அடுத்த கட்டப் பரப்புரைக்கு ஆயத்தமாவீர். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Tags : artist ,volunteers ,MK Stalin , We will amass less than 200 volumes and present it at the artist's rest: MK Stalin's letter to volunteers
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்...