திருவொற்றியூர்: மாதவரம் மண்டலத்திற்கு உட்பட்ட 200 அடி சாலையில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தில் டாஸ்மாக் கடை, ஓட்டல் உள்ளிட்ட 7 கடைகள் செயல்படுவதாக மாதவரம் மண்டல அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில், செயற்பொறியாளர் ராமமூர்த்தி தலைமையில் உதவி செயற்பொறியாளர் சேகர் மற்றும் உதவி பொறியாளர்கள் ஆகியோர் மேற்கண்ட பகுதிக்கு நேற்று காலை சென்று, ஆய்வு செய்தனர். அதில், அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடத்தில் டாஸ்மாக் உள்ளிட்ட 7 கடைகள் செயல்படுவது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, 7 கடைகளையும் பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனர்.