புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டு பேஸ்புக் பயனாளர்களின் தகவல்கள் திருடப்பட்டதாக சர்வதேச அளவில் சர்ச்சை எழுந்தது. இங்கிலாந்தைச் சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா, குளோபல் சயின்ஸ் ரிசர்ச் நிறுவனங்கள் மீது இந்த புகார்கள் கூறப்பட்டன.
இந்த விவகாரத்தில் இந்தியர்களின் தகவல்கள் திருடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இதனால் ‘உண்மையைக் கண்டறிய சிபிஐ விசாரணை நடத்தப்படும்’ என்று மத்திய தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.
சிபிஐ தொடர்ந்து நடத்திய விசாரணையில், ‘திஸ் இஸ் யுவர் டிஜிட்டல் லைப் என்ற செயலி’ மூலம் இந்தியர்களின் தகவல்கள் திரட்டப்பட்டது உறுதியானது. இதைத் தொடர்ந்து, கேம்பிரிட்ஜ் அனாலிட்டிகா, குளோபல் சயின்ஸ் ரிசர்ச் நிறுவனங்கள் மீது சிபிஐ நேற்று வழக்குப் பதிவு செய்தது.