குன்னூர் : குன்னூர் அருகே உள்ள கிளண்டேல் பகுதியில் கரடியின் தொல்லையால் ரேஷன் கடை பூட்டப்பட்டது.நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதிகளில் கரடிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபகாலமாக குன்னூரில் தேயிலை, தோட்டம் மற்றும் குடியிருப்புகளில் உணவுகளை தேடி உலா வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிளண்டேல் பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு வரும் கரடி கதவுகளை உடைத்து உள்ளே சென்று அங்குள்ள அரிசி, பருப்பு, சர்க்கரையை உண்டு செல்வதால் கடை பூட்டப்பட்டுள்ளது.
மேலும் மீண்டும் ரேஷன் கடைக்கு புகுந்து விடாமல் தடுக்க இரும்பு தகரம், டிரம், கற்கள் ஆகியவற்றை கொண்டு கடை அடைக்கப்பட்டுள்ளது. அவ்வப்போது பகல் நேரங்கள் ரேஷன் கடை அருகே கரடி நடமாட்டம் இருப்பதன் காரணமாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும் வனத்துறையினர் அட்டகாசம் செய்யும் கரடியை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடியிருப்புவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.