தா.பழூர் : மழையில் மூழ்கி முளைத்த நெல்லுக்கு நிவாரணம் வழங்க கோரி விவசாயிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் அழுகிய நெல்வயலில் இறங்கி நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள தென்கச்சி பெருமாள் நத்தம் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது தொடர் மழையின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த நெல்மணிகள் நீரில் மூழ்கி, வயல்களில் நெற்பயிர்கள் முளைத்து வீணாகியுள்ளது.
கொரோனா, புரெவி மற்றும் நிவர் புயல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விவசாயிகளாகிய நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அதிகாரிகள் சரியான முறையான கணக்கெடுப்பு நடத்தி பாதிப்படைந்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து அழுகிய நெல் வயலில் இறங்கி நேற்று விவசாயிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கிளை செயலாளர் அன்பழகன் தலைமை வகித்தார். இதில் கஜேந்திரன், மனோகரன் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் உலகநாதன் கண்டன உரையாற்றினார். மேலும் மாவட்ட துணை தலைவர் ராமநாதன், ஒன்றிய செயலாளர் அபிமன்னன், ஒன்றிய துணை செயலாளர் சக்கரவர்த்தி, தனசிங், தங்கவேல், பரமசிவம், ராமதாசு உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் வயலில் இறங்கி கோஷங்கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.