×

பெங்களூருவில் போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட 2 பேர் கைது

பெங்களூரு: பெங்களூரு தென்மண்டல போலீஸ் எல்லைக்கு உட்பட்ட குமாரசாமி லே-அவுட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மர்ம நபர்கள் சிலர் போதை பொருட்கள் விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் துணை கமிஷனர் ஹரிஷ்பாண்டே, இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், நஞ்சேகவுடா, சுப்ரமணி, வித்யாஸ்ரீ, நாகேஷ் ஆகியோர் தலைமையில் தனப்படை அமைத்து மாறு வேடத்தில் சம்பவ இடத்துக்கு வந்து ரகசியமாக கண்காணித்தனர்.

 அப்போது வாலிபர் ஒருவர் போதை மாத்திரைகள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தாவரகெரே பாலாஜி நகரை சேர்ந்த ராகுல்துளசிராம் (28) என்றும் தமிழகம் சேலம் மாவட்டம் செவ்வாபேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி (48) என்பவருடன் இணைந்து போதை பொருள் விற்பனை செய்து வருவதும் தெரியவந்தது. ராகுல்துளசிராமை கைது செய்த போலீசார் அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் பாலாஜியை கைது செய்தனர்.

 பின்னர் இவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ரூ. 1 கோடியே 39 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பிலான 9,310 எல்.எஸ்.டி. போதை மாத்திரைகள், ரூ. 27,50 லட்சம் ரொக்கம், செல்போன், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் போதை பொருள் விற்பனை கும்பலை கைது செய்து தனிப்படை போலீசாருக்கு மாநகர போலீஸ் கமிஷனர் கமல்பந்த், உதவி ஆணையர் சவுமேந்துமுகர்ஜி ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

Tags : Bangalore , In Bangalore Two arrested for drug trafficking
× RELATED பெங்களூரு குண்டுவெடிப்பு – தமிழ்நாட்டில் NIA சோதனை