பெங்களூரு: கொப்பள் மாவட்டம் கங்காவதி தாலுகா ஆனேகொந்தி கிராமத்தில் கடந்த சில தினங்களாக சிறுத்தைகள் புகுந்து கால்நடைகள் மீது தாக்குதல் நடத்தி வந்தது. இதில் அச்சம் கொண்ட கிராமத்தினர் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வதை தவிர்த்து வந்தனர். அதேபோல், சிறுத்தைகளை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து, சம்பவம் நடந்த கிராமத்துக்கு வந்த அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
பின்னர் சிறுத்தை நடமாட்டத்தை சிசிடிவி கேமரா, டிரோன் கேமரா மூலம் கண்காணித்தனர். ஆனால் சிறுத்தைகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் கும்கி யானைகள் மூலம் சிறுத்தைகளை தேடும் பணிகளை தொடங்கினர். அப்போது சிறுத்தைகள் தென்படவில்லை. இதனால் துர்காமலை பகுதியில் இரும்பு கூண்டு அமைத்து அதில் இறைச்சியை வைத்து சிறுத்தைகளை பிடிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டனர்.
இந்நிலையில் சம்பவத்தன்று இரவு இரைதேடி வந்த இரண்டு சிறுத்தைகளும் கூண்டில் இருந்த இறைச்சியை சாப்பிட சென்ற போது சிக்கிக்கொண்டது. சிறுத்தைகள் சிக்கியது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அதிகாரிகள் கால்நடை மருத்துவர் மூலம் மயக்க ஊசி செலுத்தி வனப்பகுதிக்கு எடுத்து சென்று விட்டனர்.