புதுடெல்லி: சமக்ர சிக்ஷா திட்டத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்ட 2,766 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்கும்படி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க்கிற்கு துணை முதல்வர் சிசோடியா கடிதம் அனுப்பி வலியுறுத்தி உள்ளார். சிசோடியா அனுப்பிய கடித விவரம்: மாநிலத்தின் நடப்பு நிதியாண்டு பட்ஜெட் மற்றும் அரசின் ஆண்டு செயல் திட்டம் குறித்து கடந்த ஆண்டு மே மாதம் தங்களுடன் விரிவான ஆலோசனை நடத்தினேன்.
மத்திய, மாநில அரசுகளிடையே நீடிக்கும் நிதி பகிர்வு நடைமுறைப்படி, ஒப்பந்த அடிப்படை ஆசிரியர்களுக்கு 6 மாத சம்பளம் வழங்க ஒப்புக் கொண்டு அதனை நிறைவேற்றியும் உள்ளீர்கள். 6 மாத காலம் கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்தது. எனவே, எந்த அடிப்படையில் ஒப்புக் கொண்டீர்களோ, அதே அடிப்படையில் வரும் மார்ச் 31ம் தேதி வரை சமக்ர சிக்ஷா திட்டத்தில் ஒப்பந்த அடிப்படை ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்க நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் சிசோடியா கூறியுள்ளார்.