* அறிவிப்பு பலகை வைப்பது கட்டாயம்
* தெற்கு மாநகராட்சி புது உத்தரவு
புதுடெல்லி, ஜன.22: தெற்கு டெல்லி பகுதியில் ஏராளமான இறைச்சிக்கடைகள், அசைவ உணவங்கள், சாலையோர கடைகள், ரெஸ்டாரண்டுகள் இயங்கி வருகின்றன. குறிப்பாக, டிபன்ஸ்காலனி, அமர் காலனி, சரோஜினி நகர், தெற்கு வரிவாக்கம் மற்றும் ஐஎன்ஏ பகுதியில் இதுபோன்ற ஏராளமான கடைகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், இதுபோன்ற கடைகளில் பரிமாறப்படும் இறைச்சி ஹலால் அல்லது ஜட்கா வகை குறித்து விளக்கமாக அறிவிப்பு பலகையில் தெரிவிக்க வேண்டும் என தெற்கு மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான தீர்மானம் தெற்கு மாநகராட்சியின் நிலைக்கமிட்டி கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதியே தாக்கல் செய்து இருந்தது.
அவற்றிற்கு தெற்கு மாநகராட்சியில் நடைபெற்ற நேற்றைய கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். தெற்கு மாநகராட்சிக்குட்பட்ட 104வது வார்டின் நான்கு மண்டலங்களில் மட்டும் சுமார் ஆயிரக்கணக்கான உணவகங்கள் உள்ளன. அவற்றில் 90 சதவீதம் கடைகளில் அசைவ உணவு பரிமாறப்படுகிறது. ஆனால் இங்கு பரிமாறப்படுவது ஹாலால் வகை இறைச்சியா அல்லது ஜட்காவா என்பது பற்றி தெரிவிக்கப்படுவதில்லை.
ஏனெனில், இந்து மதம் மற்றும் சீக்கிய மதத்தின்படி, ஹலால் இறைச்சி சாப்பிடுவது தடை செய்யப்பட்டுள்ளது மற்றும் மதத்திற்கு எதிரானதாகும். இதேபோன்று இறைச்சிக்கடைகளும் இந்த நடைமுறையை பின்பற்றுவதில்லை. கடைகளுக்கு உரிமம் பெறும்போது தெரிவிக்கப்படுவது போன்று உரிமம் பெற்றபின்பு இருப்பதில்லை. வேறொன்றை விற்பனை செய்கிறார்க்ள. இது நுகர்வோரை பாதிப்படைய செய்கிறத. எனவே தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
வியாபாரிகள் சங்கம் எதிர்ப்பு
டெல்லி இறைச்சி வியாபாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் இர்ஷாத் குரேஷி, மாநகராட்சியின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறுகையில்,” எம்சிடியின் இந்த நடவடிக்கை மற்ற முக்கியமான பிரச்சினைகளிலிருந்து கவனத்தைத் திசைதிருப்பும் ஒரு வழியாகத் தோன்றுகிறது. 1957 ஆம் ஆண்டின் எம்.சி.டி சட்டங்களுக்கு இணங்க, இறைச்சி கடைகள் எப்போதுமே அவர்கள் விற்கிற இறைச்சி குறித்த விவரங்களை வெளியிட்டு விற்பனை செய்து வருகின்றனர். எனவே, அதிகாரிகள் தேவையில்லாமல் இதிலிருந்து ஒரு பிரச்சினையை உருவாக்கி வருகின்றனர் என்றுதான் சொல்ல தோன்றுகிறது” என்றார்.