×

இலங்கை கடற்படையால் கொடூரமாக தாக்கப்பட்டு 4 மீனவர்களும் எரித்து கொலை: மீனவர் அமைப்புகள் கொதிப்பு; உடல்களை ஒப்படைக்க வலியுறுத்தல்; போராட்டத்தால் ராமேஸ்வரத்தில் பதற்றம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 4 மீனவர்களும், இலங்கை கடற்படையால் கொடூரமாக தாக்கப்பட்டு, எரித்து கொல்லப்பட்டிருக்கும் தகவல்கள் மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 4 மீனவர்களின் உடல்களையும், பிரேத பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்க வேண்டுமென, உறவினர்கள் தங்கச்சிமடத்தில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவுகிறது. கோட்டைப்பட்டினம் கடற்கரையில் இருந்து கடந்த 18ம் தேதி ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்த ஆரோக்கிய சேசு விசைப்படகில் மீனவர்கள் செந்தில்குமார் (32), நாகராஜ் (52), மெசியா (30), சாம் (28) ஆகியோர் மீன் பிடிக்க சென்றனர்.

இவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், மீனவர்களின் படகை வழிமறித்து அவர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். நீண்டநேரம் மீன்பிடி படகை நிறுத்தி வைத்திருந்த கடற்படையினர் ரோந்து கப்பலால் படகின் மீது மோதி சேதப்படுத்தியுள்ளனர். இதில் படகு கடலில் மூழ்கிய நிலையில் படகில் இருந்த 4 மீனவர்களும் கடலில் குதித்ததாகவும், படகுடன் கடலில் மூழ்கி விட்டார்கள் என்றும் தகவல் வெளியானது. அப்பகுதிக்கு அருகே மீன்பிடிக்கச் சென்றிருந்த மற்ற மீனவர்கள் இலங்கை கடற்படைக்கு பயந்து, கடலில் மூழ்கிய படகின் அருகில் செல்ல முடியாமல் கரை திரும்பினர். இச்சம்பவம் குறித்து கரையில் இருந்த மீனவர்களிடம் தெரிவித்தனர்.

மீனவர்களுடன், இந்திய கடலோர காவல் படையினரும் தேடும் பணியில் ஈடுபட்டனர். காணாமல் போன மீனவர்களில் உச்சிப்புளி மீனவர் செந்தில்குமார், மண்டபம் சாம் ஆகியோரின் உடல்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு நெடுந்தீவு கடல் பகுதியில் இலங்கை கடற்படையால் மீட்கப்பட்டன. நாகராஜ், மெசியா ஆகியோரின் உடல்கள் இலங்கை கடற்பரப்பில் நேற்று மாலை மீட்கப்பட்டன. உடல்கள் யாழ்ப்பாணம் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்ட உடல்கள் எரிந்து கருகிய நிலையில் உள்ளன.

எனவே, 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கொடூரமான முறையில் தாக்கியும், பின்னர் படகில் இருந்த டீசலை, அவர்கள் மீது ஊற்றி எரித்துக் கொன்றிருப்பதும், பின்னர் படகை மூழ்கடித்திருப்பதும் தெரிய வந்துள்ளதாக ராமேஸ்வரம் மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழக மீனவர்கள் கடும் கொந்தளிப்பில் உள்ளனர். மீனவர்கள் 4 பேரின் உடல்களையும் பிரேதப் பரிசோதனை செய்யாமல் ஒப்படைக்க வலியுறுத்தி, தங்கச்சிமடத்தில் மீனவர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். மீனவர் சங்க தலைவர் சேசுராஜ் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ‘‘உயிரிழந்த மீனவர்களின் உடலை பரிசோதனை செய்யாமல், உறவினர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்வதுடன் மீனவர்களின் உடலை இங்கு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். சிறைபிடிப்பு நடவடிக்கை தடுக்கப்பட வேண்டும். சிறை பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகளை நிபந்தனையின்றி விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கச்சத்தீவில் மீன்பிடி உரிமையை பெற்றுத்தரவேண்டும்’’ என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் ஏராளமான மீனவர்கள், உயிரிழந்தவர்களின் உறவினர்கள் பங்கேற்றனர். இதே கோரிக்கையை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணி மற்றும் கோட்டைப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு தமிழக கடலோர பகுதியிலும் மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர்.

* கடலில் விசாரணை
மீனவர்களை வழிமறித்த இலங்கை கடற்படையினர், படகை கப்பல் அருகில் நிறுத்தி வைத்து மீனவர்களிடம் விசாரணை செய்துள்ளனர். பின்னர் மீனவர்கள் நால்வரையும் கடுமையாக தாக்கி தீ வைத்து எரித்து மீனவர்களுடன் படகை கடலில் மூழ்கடித்ததாக மீனவர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

* புலனாய்வுத்துறை விசாரணை
4 மீனவர்கள் எரித்து கொலையான சம்பவம் தொடர்பாக மத்திய, மாநில புலனாய்வுத்துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். தமிழக மீன்வளத்துறை அதிகாரிகளும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

* ‘இலங்கை கடற்படையினர் மீது கொலைவழக்கு பதியவேண்டும்’
ராமேஸ்வரம் மீனவர் சங்க தலைவர் சேசுராஜா கூறுகையில், ‘‘இலங்கை கடற்படையினர் தொடர்ந்து மீனவர்களை தாக்கி வருகின்றனர். வலை உள்ளிட்ட சாதனங்களையும் சேதப்படுத்துகின்றனர். படகுகளை கப்பலால் மோதி சேதப்படுத்தி கடலில் மூழ்கடிப்பதும் தொடர்கிறது. இதனால் மீனவர்களுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. படகுகளை இழந்த மீனவர்கள் பலரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மீனவர்கள் நால்வர் மீதும் இலங்கை கடற்படையினர் கொலைவெறி தாக்குதல் நடத்தி படகுடன் கடலில் மூழ்கடித்துள்ளனர். கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் தரவேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். கடற்படையினர் மீனவர்களை படகுடன் சிறைபிடித்து செல்லும் நடவடிக்கையை தடுக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

Tags : fishermen ,death ,organizations ,navy ,Sri Lankan ,Rameswaram , 4 fishermen burnt to death by Sri Lankan navy: Fishermen's organizations angry; Insisting on handing over the bodies; Tension in Rameswaram over the struggle
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...