மதுரை: மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளை பிடித்ததாக கண்ணன் என்பவருக்கு முதல் பரிசாக கார் வழங்கப்்பட்டது. ஆனால், இதில் மோசடி நடந்துள்ளது என 2ம் இடத்தை பிடித்த பொதும்பு கருப்பண்ணன் புகார் கூறி உள்ளார். இதுகுறித்து நேற்று கலெக்டர் அன்பழகனிடம் கொடுத்த மனுவில், ‘‘போட்டியில், முதல் சுற்று முதல் 3ம் சுற்று வரை 33ம் எண்ணில், ஹரிகிருஷ்ணன் பங்கேற்று 7 காளைகளை பிடித்தார். மூன்றாம் சுற்றில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வெளியேறினார். அப்போது, தனது பனியனை பதிவு செய்யாத மற்றொரு நபரிடம் (கண்ணன்) கொடுத்துள்ளார். அவர் 5 காளைகளை பிடித்தார். இதனால் 12 காளைகளை கண்ணன் பிடித்ததாக கருதி அவருக்கு முதல் பரிசு அறிவிக்கப்பட்டது. ஆள் மாறாட்டம் செய்துள்ளதால் அவருக்கு முதல் பரிசு வழங்கக்கூடாது. அதிக காளைகளை பிடித்த எனக்கே முதல் பரிசை வழங்க வேண்டும்’’ என தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி ஆர்டிஓவிற்கு கலெக்டர் பரிந்துரை செய்துள்ளார்