×

முதல் மனைவியின் உறவை துண்டிக்காததால் தகராறு 2வது மனைவியை இரும்பு பைப்பால் அடித்து கொன்ற கணவன் கைது

ஆவடி:    ஆவடி அடுத்த மேல்பாக்கம், பஜனை கோவில் தெருவில்  வசித்தவர் சரிதா (35). இவரது முதல் கணவர் சுரேஷ். இவர்களுக்கு செர்மிலி (7)  என்ற மகள் உண்டு. இந்நிலையில், கடந்த 3ஆண்டுக்கு முன்பு மதன் (42)  என்பவருடன் தொடர்பு ஏற்பட்டது. இவர், மாட்டுக்கறி வியாபாரம் செய்து  வருகிறார். இவருக்கு அலமேலு என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.   இதற்கிடையில், கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு மதன், சரிதா இருவரும் 2வது  திருமணம் செய்து கொண்டனர். பின்னர்,  இருவரும் மேல்பாக்கத்தில் வசித்து  வந்தனர்.   மேலும், சரிதாவுடன் மூத்த மகள் செர்மிலியும் வசித்து  வந்தாள். சரிதா- மதனுக்கு  7 மாதத்தில் மெகிலினா என்ற பெண் குழந்தையும்  உள்ளது. திருமணத்திற்கு முன்பு சரிதா பல்லாவரத்தில் உள்ள தனியார்  நிறுவனத்தில் சூபர்வைசராக பணியாற்றி வந்தார். திருமணம் முடிந்த பிறகு,  சரிதாவை வேலைக்கு செல்ல வேண்டாம் என மதன் கூறிவிட்டார். இருந்த போதிலும்,  அவர் சமீபகாலமாக மீண்டும் வேலைக்கு செல்வேன் என மதனிடம் தகராறு செய்து  வந்துள்ளார். இதற்கிடையில், கடந்த சில தினங்களாக மதனுடன் அவரது முதல் மனைவி  அலமேலுவின் மகள் சங்கீதா செல்போனில் தொடர்பு கொண்டு அடிக்கடி பேசி  வந்துள்ளார். இந்த தகவல் சரிதாவுக்கு தெரிந்து ஆத்திரம் அடைந்துள்ளார்.

  இதனையடுத்து, அவர் மதனிடம் முதல் மனைவி, குழந்தைகளுடன் தொடர்பில்லை  எனக்கூறி தான் என்னை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்துகிறாய்,   அப்படி இருக்கையில் மீண்டும் அவர்களிடம் உறவாடுவது ஏன் எனக்கேட்டு தகராறு  செய்துள்ளார். இப்பிரச்சினை அவர்களுக்கு இடையே கடந்த இரு தினங்களாக  நடந்துள்ளது.   இந்நிலையில், நேற்று மதியம் மீண்டும் மதன், சரிதா  ஆகியோருக்கு இடையே தகராறு வெடித்துள்ளது. இதில், சரிதா, மதனை  அவதூறாக திட்டி உள்ளராம். அப்போது, மூத்த மகள் செர்மிலியும் வீட்டில்  இருந்துள்ளார். இந்த தகராறில் ஆத்திரமடைந்த மதன் வீட்டில் இருந்த இரும்பு  பைப்பை எடுத்து சரிதாவின் தலையில் சரமாரியாக அடித்துள்ளார். இதில், சம்பவ  இடத்திலேயே சரிதா ரத்த வெள்ளத்தில் இறந்தார். தனது கண்முன் தாய்  அடித்துக்கொலை செய்யப்பட்டதை பார்த்த, சர்மிலி அதிர்ச்சி அடைத்து கதறி  அழுதார். இதன் பிறகு மதன், தனக்கு பிறந்த 7மாத குழந்தையுடன் அங்கிருந்து  தப்பி ஓடினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு ஆவடி போலீஸ் இன்ஸ்பெக்டர்  காளிராஜ் தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர்.

  பின்னர், போலீசார்  சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு  செய்து தப்பி ஓடிய மதனை தீவிரமாக தேடினர். தலைமறைவாக இருந்த மதனை கொலை  நடந்த 3 மணி நேரத்தில் சுற்றி வளைத்து பிடித்தனர்.  மேலும், போலீசார் மதனை கைது செய்து  கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா எனவும்  விசாரணை நடத்தி வருகின்றனர்.  இதற்கிடையில், அவரிடம் இருந்த குழந்தையை போலீசார் மீட்டு உறவினர்களிடம்  ஒப்படைத்தனர்.

Tags : death , Husband arrested for beating second wife to death with iron pipe
× RELATED மதுரை விபத்து: பலி எண்ணிக்கை 6ஆக உயர்வு