புதுடெல்லி: வரும் 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு என்ற இலக்குடன், ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015ம் ஆண்டு தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், நகர்ப்புறங்களில் 1.12 கோடி வீடுகள் கட்டப்பட உள்ளன. இத்திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் 1.68 லட்சம் வீடுகள் கட்ட, ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலாளர் துர்கா சங்கர் மிஸ்ரா கூறுகையில், ‘‘திட்டமிட்ட இலக்குடன் பிரதமரின் வீடு வழங்கும் திட்டம் செயல்படுகிறது.இதுவரை 41 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 70 லட்சம் வீடுகள் தயாராகி வருகின்றன. தற்போது, ஒரு லட்சத்து 68 ஆயிரத்து 606 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இவற்றை பயனாளர்களிடம் ஒப்படைப்பதில் மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.’’ என்றார்.