திருவனந்தபுரம்: மலையாள நடிகை பலாத்கார வழக்கில் அப்ரூவராக மாறியவரை கைது செய்து ஆஜர்படுத்த எர்ணாகுளம் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரபல மலையாள நடிகை கடத்தப்பட்ட வழக்கு எர்ணாகுளத்தில் உள்ள தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த விபின்லால் என்பவர் அப்ரூவராக மாறினார். இதையடுத்து அவரை போலீசார் விடுவித்தனர். இதை எதிர்த்து நடிகர் திலீப் எர்ணாகுளம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நேற்று முன்தினம் விசாரித்த நீதிமன்றம் அப்ரூவராக மாறிய விபின்லாலை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. மேலும் அப்ரூவராக மாறினாலும் வழக்கு நிலுவையில் இருக்கும்போது அவரை வெளியே விடுவித்தது ஏன்? என போலீசுக்கு நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஆனால், நேற்று விபின்லால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவில்லை. இதையடுத்து, மீண்டும் நீதிமன்றம் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.