பெங்களூரு: கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 140 நாட்களாக பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள நடிகை ராகிணி திவேதியை ஜாமீனில் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் போதை பொருள் புழக்கத்தில் விடும் புகாரில் 20க்கும் மேற்பட்டவர்களை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். இதில், கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர் ஜீவராஜ் ஆல்வா மகன் ஆதித்யா ஆல்வா, கேரளா மாநில முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணனின் மகன், கன்னட திரைப்பட நடிகைகள் சஞ்சனா கல்ராணி, ராகிணி திவேதி உள்பட பலர் அடங்குவர். ேபாதை பொருள் வழக்கில் நடிகை ராகிணியை கடந்தாண்டு செப்டம்பர் 4ம் தேதியும், கல்ராணியை செப்டம்பர் 8ம் தேதி சிசிபி போலீசார் கைது செய்தனர். இவர்கள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுக்கள், கீழ் நீதிமன்றங்களில் தள்ளுபடி செய்யப்பட்டன. பின்னர், கல்ராணிக்கு மட்டும் உடல் நலம் பாதிப்பை ஆதாரமாக வைத்து, கர்நாடகா உயர் நீதிமன்றம் கடந்த டிசம்பர் 11ம் தேதி ஜாமீன் வழங்கியது. ராகிணியின் மனுவை தள்ளுபடி செய்தது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு செய்தார். அம்மனு நீதிபதி ரோகின்டன் நாரிமன் அமர்வில் நேற்று விசாரிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட கேட்ட பின், ராகிணியை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். இதனால், 140 நாட்களுக்கு பிறகு ராகிணி விடுதலையாகிறார்.