ஆர்.எஸ்.மங்கலம்: திருப்பாலைக்குடியில் பழைய மருத்துவமனை கட்டிடம் மிகவும் சேதமடைந்து பொது மக்களை காவு வாங்கும் விதமாக ஆபத்தான நிலையில் உள்ளது. இதனை உடனே அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிலுள்ள திருப்பாலைக்குடியில் 70 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு மருத்துவமனையாக இயங்கி வந்த பழைய கட்டிடம் சேதமடைந்தது. இந்நிலையில் மருத்துவமனைக்காக கிழக்கு கடற்கரை சாலை அருகே புதிய கட்டிடம் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகவே புதிய கட்டிடத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கு வருகின்றது. ஆனால் ஏற்கனவே மருத்துவமனையாக இயங்கி வந்த கட்டிடத்தை இடிக்காமல் அப்படியே விட்டு விட்டனர்.
அந்த கட்டிடம் மிகவும் சேதமடைந்து விட்டது. அக்கட்டிடம் இருக்க கூடிய பகுதி குழந்தைகளும், பொதுமக்களும் அதிகம் பயன்படுத்தக் கூடிய மிகவும் முக்கியமான வீதியாகும். அதன் அருகே அங்கன்வாடி மற்றும் பள்ளிக்கூடம், வங்கி ஆகியவை உள்ளது. தற்பொழுது இந்த கட்டிடம் கொஞ்சம் கொஞ்சமாக இடிந்து கீழே விழுந்து வருகிறது. கட்டிடத்தின் மேற்பகுதியில் ஏராளமான மரக்கன்றுகள் முளைத்து பெரிய மரமாகி வருகின்றது. இதனால் மேலும் கட்டிடம் விரிசலடைந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இப்போது பெய்துள்ள கனமழையால் கட்டிடம் தண்ணீரை உறிஞ்சி மிகவும் ஆபத்தை விளைவிக்கும் விதமாக உள்ளது. கட்டிடம் இடிந்து விழுந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அப்படி ஒரு நிலை ஏற்படாமல் தடுக்கும் விதமாக அந்த கட்டிடத்தை இடித்து தரைமட்டமாக்கி அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
பொதுமக்கள் கூறுகையில், இந்த பழைய மருத்துவமனை கட்டிடம் மிகவும் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பகுதியில் ஏராளமான சிறுவர், சிறுமிகள் ஆடி ஆடி விளையாடுகின்றனர். தெருக்களுக்குள் செல்பவர்கள் மற்றும் வங்கிக்கு செல்லும் வாடிக்கையாளர்கள் என தினசரி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் வழியில், இப்படி ஒரு கட்டிடம் இருப்பது மிகவும் அச்சமாக உள்ளது. கட்டிடம் இடிந்து வேறு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டு விடுமோ என்று கவலையாகவும் உள்ளது. எனவே ஏதேனும் விபரீதம் ஏற்படும் முன்னர் வரும் முன் காக்கும் விதமாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்கின்றனர்.