புதுடெல்லி: ஈரத்துணிகளை காயவைத்து மடிப்பு கலையாமல் இஸ்திரி போட்டுத் தருவதற்காக சலவை தொழிலாளர்களும் விவசாயிகளை ஆதரித்து சிங்கு எல்லையில் முகாமிட்டுள்ளனர். மழை மற்றும் அதைத் தொடர்ந்து நீடிக்கும் பனி காரணமாக, திருத்திய வேளாண் சட்டங்களை வாபஸ் பெற மத்திய அரசை வலியுறுத்தி டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வரும் லட்சக்கணக்கான விவசாயிகளின் துவைத்த துணிகள் காயாமல் இருந்தது. மாற்றுத்துணியுடன் மட்டுமே வந்த விவசாயிகள், துணிகள் காயாததால் மிகவும் சிரமப்பட்டனர். இந்த சூழலில் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சலவை பெட்டிகளுடன் தொழிலாளர்கள் சிங்கு எல்லைக்கு வந்து, விவசாயிகளின் சிரமத்தை தீர்த்து வைத்தனர்.
மின்சாரத்தில் செயல்படும் இஸ்திரி பெட்டிக்கு மின்சாரம் சப்ளை செய்யும் விதமாக மின்கம்பம் அருகிலேயே அவருக்கு சலவை மேஜை தயார் செய்யப்பட்டது. அவருடன் லூதியானாவில் இருந்து சலவை தொழிலாளி சேவா சிங்கும் இப்போது இணைந்துள்ளார். அதையடுத்து சலவை மேஜைகள் அதிகரிக்கப்பட்டது. இவர்களுடன் மேலும் பலர் இணைந்து தினமும் 10 மணி நேரம் உழைத்து 250 துணிகளுக்கு பெட்டி போடுகிறார்கள். இஸ்திரி சேவை குறித்து அத்தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘எங்களுக்கென ஊரில் உள்ள சிறிதளவு நிலத்தில் நாங்களும் காய்கறி விளைவிக்கிறோம். எங்களால் முடிந்த உதவியை செய்கிறோம். வருமானத்தை காட்டிலும் சகோதரர்களுக்கு வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக உழைப்பது நிம்மதியாக உள்ளது’’, எனக் கூறியுள்ளனர்.