×

கடந்த 10 ஆண்டுகளில் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி நான்தான் என்பதில் பெருமைப்படுகிறேன்: டொனால்ட் ட்ரம்ப் உரை

வாஷிங்டன்: எனது ஆட்சியில் பெரிய அளவில் வரிகளை குறைத்தேன், மக்கள் மகிழ்ச்சியாக இருந்தனர் என அமெரிக்க மக்கள் மத்தியில் டொனால்ட் ட்ரம்ப் உரையாற்றினார். எந்த அமெரிக்க அதிபரும் இதுவரை பெறாத ஆதிக ஆதரவை நான் பெற்றேன். புதிதாக பதவியேற்க உள்ள அரசு, சிறப்பாக ஆட்சி நடத்த எனது வாழ்த்துக்கள் எனவும் கூறினார். அவர் பேசியதாவது;  அமெரிக்காவையே மீண்டும் உயர்ந்த நாடாக நான் என் பதவிக்காலத்தில் மாற்ற முயற்சி மேற்கொண்டேன். தேர்தலில் கடினமான போராட்டங்களையும், கடினமான போரையும் சந்தித்தேன். அதன்பின் என்னை நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள். இன்று 45-வது ஜனாதிபதியாக இருந்து எனது கடமைகளை முடித்துள்ளேன்.

நாம் பல்வேறு விஷயங்களை ஒன்றாக இணைந்து சாதித்துவிட்டோம் என்ற உண்மையுடன் நான் உங்கள் முன் நிற்கிறேன் என்பதில் பெருமைப்படுகிறேன். நான் இந்த இடத்துக்கு வந்தபின் ஏராளமானவற்றைச் செய்திருக்கிறேன். ஜனாதிபதி என்ற வார்த்தையின் அர்த்தத்துக்கு அப்பாற்பட்டு நான் பணியாற்றி இருக்கிறேன். இந்த வாரம் நாம் புதிய நிர்வாகத்தை ஏற்கப் போகிறோம். அமெரிக்காவைப் பாதுகாப்பாகவும், மேன்மையடையச் செய்யவும் வெற்றிபெறவும் பிரார்த்திப்போம். புதிய அரசுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கவும் வாழ்த்துகிறேன்.

அதிர்ஷ்டம் மிகவும் முக்கியமான வார்த்தை. அமெரிக்க நாடாளுமன்றம் தாக்கப்பட்டபோது மக்கள் அனைவரும் அச்சமடைந்தனர். அரசியல் வன்முறை என்பது நாம் மதிக்கும் அனைத்துக்கும் எதிரான தாக்குதல். இதை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. நாம் எப்போதும் இல்லாதவகையில், ஒன்றாக இணைந்து மதிப்புமிக்க விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு, கோபத்தை மறந்து, ஒரு தளத்தில் இணைய வேண்டும். ஏராளமான வரிச் சலுகைகள், சீனா மீது வரிவிதிப்பு, எரிசக்தியில் தன்னிறைவு, குறுகிய காலத்தில் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிப்பு எனப் பல்வேறு விஷயங்களைச் செய்திருக்கிறோம். அமெரிக்காவையும், வெளிநாடுகளில் அமெரிக்கத் தலைமையையும் வலிமைப்படுத்தி இருக்கிறோம்.

இந்த உலகத்தை நாம் மதிக்க வைத்திருக்கிறோம். இந்த மதிப்பை அடுத்துவருவோர் இழந்துவிடக் கூடாது. மத்தியக் கிழக்கு நாடுகளில் பல்வேறு அமைதி ஒப்பந்தங்கள் என்னுடைய ஆட்சியில் கையொப்பம் ஆகின. இதுபோன்ற ஒப்பந்தங்கள் நடக்கும் என யாரும் நம்பவில்லை. மத்தியக் கிழக்கு நாடுகளில் வன்முறையின்றி, ரத்தமின்றி, போரை முடிவுக்குக் கொண்டுவந்து, நமது வீரர்களை நாடு திரும்பவைத்தோம். கடந்த 10 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதிகளில் எந்த நாட்டின் மீதும் போர் தொடுக்காத ஜனாதிபதி  நான்தான் என்பதில் பெருமைப்படுகிறேன். உலகின் சக்தி மிக்க நாடான அமெரிக்கா வெளிநாடுகளில் இருந்து நிலையான அச்சுறுத்தல்கள், சவால்களை எதிர்கொண்டது.

ஆனால், நம் மீது நம்பிக்கை இழப்பதும், நம்முடைய தேசத்தின் மகத்துவத்தின் மீது நம்பிக்கை இழப்பதும்தான் நாம் சந்திக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். தேசம் என்பதில் நாம் உணர்வுபூர்வமாக இருக்க வேண்டும். சுதந்திரமான கருத்துரிமை, பேச்சுரிமை, வெளிப்படையான விவாதம்தான் இந்தச் செழுமையான பாரம்பரியத்தின் மையமாக நம்பப்படுகிறது. நாம் யார், எப்படி இங்கு வந்தோம் என்பதை மறந்தாலும், அமெரிக்காவில் அரசியல் தணிக்கை, தடுப்புப் பட்டியல் நடப்பதை அனுமதிக்கலாமா? இதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. வெளிப்படையான விவாதத்தை மறுப்பதும், கருத்துரிமையை மறுப்பதும் நம்முடைய பாரம்பரியத்தை மீறுவதாக அமையும். நான் ஜனாதிபதி பதவியை விட்டுச் சென்றாலும், தொடர்ந்து பொதுவாழ்க்கையில் இருப்பேன். புதன்கிழமை நண்பகலில் ஆட்சி மாற்றத்தை ஒப்படைக்கத் தயாராகிறேன். இவ்வாறு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Tags : President ,war ,country , I am proud to be the President who has not waged war on any country in the last 10 years: Donald Trump Speech
× RELATED ரஷ்யாவில் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகள்...