புதுடெல்லி: ‘வாட்ஸ்அப் நிறுவனம் தனியுரிமை கொள்கை குறித்த புதிய மாற்றங்களை திரும்ப பெற வேண்டும்’ என்று மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை வலியுறுத்தியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் சமீபத்தில் பயனர்களின் த னி தகவல் களை கண் காணிக்கப் போவதாகவும், தனிநபர் தகவல்களை மற்ற நிறுவனங்களுடன் பகிரப் போவதாகவும் அறிவித்தது. இதற்கு சம்மதிக்காதவர்கள், வாட்ஸ்அப் பயன்படுத்த முடியாது எனக் கூறியது.
இது பயனாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியது. இதனால், புதிய கொள்கையை அமல்படுத்துவதை 3 மாதங்களுக்கு வாட்ஸ் அப் ஒத்தி வைத்தது.
இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை எழுதியுள்ள கடிதத்தில், ‘உலகளவில் வாட்ஸ்அப்பின் மிகப்பெரிய பயனர் தளமாக இந்தியா இருந்து வருகிறது. மேலும் அதன் சேவைகளுக்காக மிகப்பெரிய சந்தையாகவும் இருக்கிறது. எனவே, வாட்ஸ்அப் தனது புதிய கொள்கை மாற்றங்களை திரும்ப பெற வேண்டும். தனியுரிமை, தேர்வு செய்யும் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பான தரவு குறித்த அணுகுமுறை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வாட்ஸ்அப்பின் ஒரு தலைப்பட்சமான சேவை விதிமுறைகள் மற்றும் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது” என குறிப்பிடப்பட்டுள்ளது.