×

மனைவியை குடும்பம் நடத்த அனுப்பாததால் மாமியாருக்கு சரமாரி அரிவாள் வெட்டு: மருமகன் கைது

கூடுவாஞ்சேரி: ஊரப்பாக்கம் அடுத்த காரணைபுதுச்சேரி, கோகுலம் காலனி விரிவு, பொன்னுசாமி தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் (33) எலக்ட்ரீசியன். இவரது மனைவி சங்கீதா (30). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். செல்வகுமாருக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனை சங்கீதா பலமுறை கண்டித்தும் அவர் விடவில்லை. கடந்த வாரம் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு சங்கீதா, கணவருடன் கோபித்து கொண்டு, அதே பகுதியில் சர்ச் தெருவில் உள்ள தாய் கலா (48) வீட்டில் குழந்தைகளுடன் தஞ்சமடைந்தார். இந்நிலையில் செல்வகுமார், நேற்று காலை மாமியார் வீட்டுக்கு குடிபோதையில் சென்றார். அங்கு, மனைவியை குடும்ப நடத்த வரும்படி அழைத்துள்ளார்.

அப்போது, மாமியார் கலா, அவரை அனுப்ப முடியாது என கூறியுள்ளார். இதனால், அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த செல்வகுமார், அங்கிருந்த அரிவாளை எடுத்து மாமியார் கலாவை கழுத்து மற்றும் கை உள்பட பல இடங்களில் சரமாரியாக வெட்டினார். இதனை கண்ட சங்கீதா அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்களை கண்டதும், செல்வகுமார் அங்கிருந்து தப்பிவிட்டார். தகவலறிந்து கூடுவாஞ்சேரி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய கலாவை மீட்டு ஊரப்பாக்கத்தில்  உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த செல்வகுமாரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Tags : Son-in-law ,mother-in-law , Son-in-law slams mother-in-law for not sending wife to host family: Son-in-law arrested
× RELATED வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை...