சென்னை, நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு காலில் அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது.சில ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் கமல்ஹாசனுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை நடந்தது. அதன் தொடர்ச்சியாக மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர்கள் கூறி இருந்தனர். அதன்படி சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் நேற்று சேர்க்கப்பட்டார். இன்று காலை அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தி முடிக்கப்பட்டது.
இது குறித்து கமலின் மகள்களும் நடிகைகளுமான ஸ்ருதிஹாசன், அக்ஷராஹாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘அப்பாவுக்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அப்பா நலமாகவும் உற்சாகமாகவும் இருக்கிறார். நான்கைந்து நாட்களுக்கு பிறகு அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்கு பிறகு மீண்டும் மக்களை சந்திப்பார், மகிழ்விப்பார். அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளனர்.