×

பணிநீக்கம் செய்துள்ள 12 ஆயிரம் தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் : மாநகராட்சிக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்!!

சென்னை : தி.மு.க. தலைவரும் - தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், “கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக NULM திட்டத்தில் சென்னை மாநகராட்சியில் பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை திடீரென்று 12.1.2021 அன்று பணிநீக்கம் செய்திருக்கும் தற்காலிக தூய்மைப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்தி, அவர்களை அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்” என்று, இன்று (19-1-2021) பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையருக்கு எழுதியுள்ள கடிதத்தை,  சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் மா.சுப்பிரமணியன், எம்.எல்.ஏ., - சென்னை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பி.கே.சேகர்பாபு, எம்.எல்.ஏ., ஆகியோர் நேரில் அளித்தனர்.  சோழிங்கநல்லூர் தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் உடனிருந்தார்.

கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடித விவரம் பின்வருமாறு:-

அன்புடையீர்,  
 
வணக்கம். கடந்த 10 முதல் 12 ஆண்டுகளாக  NULM திட்டத்தின் சென்னை மாநகராட்சியில் தற்காலிக தூய்மைப் பணியாளர்களாக பணியாற்றி வந்த 12 ஆயிரம் பேரை திடீரென்று 12.1.2021 அன்று பணிநீக்கம் செய்திருப்பது மிகுந்த வேதனையளிப்பதாக உள்ளது. இந்த தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் சீனப்பிரதமர் வருகை,   வர்தா, நிவர் ஆகிய புயல்கள் மற்றும் கொரோனா பேரிடர் போன்ற பல்வேறு நெருக்கடி மிகுந்த காலகட்டங்களில் தூய்மைப் பணியாற்றியவர்கள். அது மட்டுமின்றி இவர்களில் 90 சதவீதம் பேர் பட்டியலின வகுப்பைச் சேர்ந்தவர்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு கொண்ட வர விரும்புகிறேன்.
 
இவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது  பணி நீக்கம் செய்திருப்பது நல்ல நிர்வாக நடைமுறை அல்ல என்று தெரிவித்துக் கொள்ளும் அதே வேளையில் - இவர்களின் வாழ்வாதாரம் மற்றும் திறம்பட ஆற்றிய பணி கருதி 12 ஆயிரம் பேரையும் மீண்டும் பணியில் அமர்த்திடுமாறு தங்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். உயர்நீதிமன்ற வழக்கின் முடிவிற்காக காத்திராமல் - இவர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : MK Stalin ,corporation , Dismissal, Corporation, MK Stalin, Letter
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...