×

சிவகங்கை மாவட்டம் முழுவதும் மொத்தம் 529 பேர் சாவு 2020ம் ஆண்டில் தற்கொலை அதிகரிப்பு-கொரோனாவால் ஏற்பட்ட வேலையிழப்பு காரணமா?

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் 2020ம் ஆண்டில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார பிரச்சனையே காரணம் என தகவல் வெளியாகி உள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 44 போலீஸ் ஸ்டேசன்களில் சில ஸ்டேசன்கள் தவிர மற்றவற்றில் மாதந்தோறும் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சி வழக்குகள் பதிவாகின்றன. இவ்வாறு மாவட்டம் முழுவதும் கடந்த 2016ம் ஆண்டு 280 பேர் தற்கொலை செய்து இறந்தனர்.

2017ம் ஆண்டில் 320 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். 2018ம் ஆண்டில் 317 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். 2019ம் ஆண்டு 315 பேர் தற்கொலை செய்துள்ளனர். ஆனால் 2020ம் ஆண்டு 529 பேர் தற்கொலை செய்து இறந்துள்ளனர். கடந்த ஐந்து ஆண்டுகளில் தற்கொலை செய்து இறந்தவர்களில் சராசரி எண்ணிக்கை 300 ஆகும். ஆனால் கடந்த ஆண்டு தற்கொலை செய்து இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இறந்தவர்களில் அதிக எண்ணிக்கையில் பெண்கள் உள்ளனர். தற்கொலை முயற்சி சம்பவங்கள் இதுபோல் இரண்டு மடங்கு நடக்கிறது.

தூக்கிட்டு கொள்வது, எலி மருந்து, பூச்சி மருந்து மற்றும் விவசாயத்திற்கு பயன்படுத்தும் மருந்துகள் குடிப்பது, தீக்குளிப்பது, கட்டிடங்களில் இருந்து குதிப்பது என நடக்கும் தற்கொலை சம்பவங்களில் மருந்து குடிப்பவர்களில் சிலர் மட்டுமே சரியான நேரத்தில் தரப்படும் மருத்துவ சிகிச்சையால் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

மாணவ, மாணவியர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்களும் நடந்து வருகின்றன. இவைகளில் பெரும்பாலானவை குடும்ப பிரச்சனைகள் காரணமாக நடந்ததாக கூறப்படுகிறது. பெற்றோர்கள் கண்டித்தது, விரக்தி, கடன் தொல்லை, உடல்நல பிரச்சனை, காதல் விவகாரம் உள்ளிட்ட காரணங்களால் தற்கொலை செய்கின்றனர்.

கடந்த ஆண்டு கொரோனாவால் ஏராளமானோர் வேலையிழந்து ஊர் திரும்பியிருந்தனர். கொரோனா பாதிப்பால் வருமானம் இழப்பு உள்பட குடும்பத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகளால் தற்கொலை எண்ணிக்கையும் அதிகரித்திருக்கலாம் என கூறப்படுகிறது. கடந்த ஆண்டு விபத்து, கொலை உள்ளிட்ட மரணங்கள் குறைந்திருந்த நிலையில் தற்கொலை அதிகரித்துள்ளது.

போலீசார் கூறுகையில், ‘‘முன்பெல்லாம் நோய் தாக்குதல் அதிகரித்து உடலில் வேதனை பொறுக்க முடியாமல் தற்கொலை செய்வது அல்லது மிகப்பெரிய சம்பவங்களை தாங்க முடியாமல் தற்கொலை செய்தனர்.

ஆனால் தற்போது சாதாரண பிரச்சனைகளுக்கு கூட அவசரப்பட்டு தற்கொலை முடிவை எடுக்கின்றனர். இளம் வயதினர் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு தற்கொலை அதிகரித்திருப்பதற்கு கொரோனாவால் ஏற்பட்ட பிரச்சனைகளும் காரணம் என்றனர்.

கவுன்சிலிங் வழங்க வேண்டும்

மனநல மருத்துவர் ஒருவர் கூறுகையில், பிரச்சனைகளை எதிர்கொள்ளும் துணிச்சல், சகிப்புத்தன்மை குறைந்தும் தற்கொலையை நாடுகின்றனர். இளம் வயதினர் எதை பற்றியும் சிந்திக்காமல் இந்த முடிவை எடுப்பது கவலையளிக்கக்கூடியது. பல்வேறு பணிகளில் கவனம் செலுத்தி தேவையற்ற சிந்தனையை போக்க வேண்டும். ஆபத்தான இப்பிரச்சனைக்கு மாவட்டம் முழுவதும் மகளிர் மன்றங்கள் உள்ளிட்ட அமைப்புகள் உதவியுடன் கவுன்சிலிங் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Tags : deaths ,Sivagangai district ,job loss ,Corona , Sivagangai: The number of suicides in Sivagangai district has increased in 2020 compared to previous years.
× RELATED மாநில அளவிலான போட்டிக்கு கூடைப்பந்து வீரர்கள் இன்று தேர்வு