×

ஆற்று திருவிழாவிற்கு தடை விதித்ததால் வெறிச்சோடிய தென்பெண்ணை ஆறு-விழுப்புரம், கள்ளக்குறிச்சி மக்கள் ஏமாற்றம்

விழுப்புரம் :  தமிழர்களின் முக்கிய விழாவான பொங்கல் பண்டிகை ஒரு வாரம் கொண்டாடப்படும். விழுப்புரம் மாவட்டத்தில் போகி பண்டிகை, தை பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கலை அடுத்து, ஆற்றுத் திருவிழா கோலாகலமாக ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தை பொருத்தவரை தென்பெண்ணை ஆற்றில் விழுப்புரம் அருகே பேரங்கியூர், பிடாகம், கோலியனூர் அருகே சின்னக்கல்லிப்பட்டு, கண்டமங்கலம் அருகே கலிஞ்சிக்குப்பம், விக்கிரவாண்டி அருகே வீடூர் அணை ஆகிய பிரசித்திபெற்ற இடங்களிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் மணலூர்பேட்டை கோமுகி அணை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் ஆற்றுத்திருவிழாவில் பெருந்திரளான மக்கள் திரளுவர்.

இதேபோல, கண்டமங்கலம் அருகே கொடுக்கூர், மேட்டுப்பாளையம், விக்கிரவாண்டி அருகே கயத்தூர், திண்டிவனம் அருகே ஓங்கூர், மரக்காணம் கடற்கரை உள்ளிட்ட 25 இடங்களில் உள்ள ஆறுகளில் ஆற்றுத்திருவிழா நடைபெறும். இந்த ஆற்று திருவிழாவில் விவசாயிகள் விளைவித்த சிறு வள்ளி கிழங்கு, தானியங்கள் மற்றும் சிறு வியாபாரிகள் பேன்சி மற்றும் விளையாட்டுப் பொருட்கள், சிறுவர்களுக்கான ராட்டிணம், ஊஞ்சல் போன்றவைகளும் இடம்பெற்றிருக்கும். பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு இந்த ஆற்றுத்திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுவார்கள்.

அப்போது பல்வேறு ஊர்களில் இருந்து சாமிகள் தீர்த்தவாரிக்கு ஆற்றுக்கு கொண்டு செல்லப்பட்டு பூஜை செய்து, கொண்டு செல்வார்கள். இதனிடையே இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை முடிந்தையடுத்து நேற்று ஆற்றுத்திருவிழா கொண்டாடப்பட இருந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாகவும், பரவுவதை தடுக்கும் வகையில் ஆற்று திருவிழாவிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் முதல்முறையாக இந்த ஆண்டு ஆற்றுத்திருவிழா விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நடைபெறவில்லை.

சாமிகளும் தீர்த்தவாரிக்கு கொண்டு செல்லப்படவில்லை. இதனால் ஒவ்வொரு ஆண்டும் விழுப்புரம் அருகே சின்னகள்ளிபட்டு, பிடாகம் உள்ளிட்ட பகுதிகளில் களைகட்டும் ஆற்று திருவிழா தடை விதிக்கப்பட்டதால் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. தடையை மீறி பொதுமக்கள் செல்லாத வகையில், ஆறுகளுக்கு செல்லும் பாதைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் திருவிழா நடைபெறும் ஆற்றுப் பகுதிகளில் கடைகள் வைக்காத வகையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பே பாதுகாப்பு ஏற்பாடுகள் போடப்பட்டிருந்தன. பல ஆண்டுகளுக்குப் பிறகு கொரோனா அச்சத்தின் காரணமாக, திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டதால் விழுப்புரம் கள்ளக்குறிச்சி மக்கள் ஏமாற்றமடைந்தனர்.

பல ஆண்டுக்கு பிறகு தீர்த்தவாரிக்கு தண்ணீர்

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததால் தென்பெண்ணை ஆறு வறண்டு கிடந்தது. இதனால் கடந்த காலங்களில் ஆற்று திருவிழாவின்போது தீர்த்தவாரிக்கு செல்லும் சாமிகளுக்கு, பூஜை செய்ய ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமலும், பள்ளம் தோண்டினாலும் தண்ணீர் கிடைக்காத நிலை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஆனால் தடை உத்தரவு காரணமாக தீர்த்தவாரிக்கு சாமிகளும் வரவில்லை, மக்களும் வரவில்லை. இனி அடுத்த ஆண்டுகளில் இந்த வாய்ப்பு கிடைக்குமா என்பது சந்தேகம் என்று, ஆற்றுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் சென்றனர்.


Tags : Desperate Tenpennai Aru-Viluppuram ,river festival ,Kallakurichi , Villupuram: Pongal, the main festival of the Tamils, is celebrated for a week. Bogi Festival in Villupuram District, Tai
× RELATED பங்குச்சந்தையில் நஷ்டத்தால் விரக்தி...