×

தமிழகத்தில் யாராவது புற்றுநோயால் பாதிக்கப்பட்டால், உடனடியாக அவர்களது நினைவிற்கு வருவது சாந்தா என்ற பெயர் தான் : வைகோ இரங்கல்

சென்னை : மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில், புற்றுநோய் மருத்துவத்தில் அனைத்து இந்திய அளவில் முன்னோடிகளில் முதன்மையானவரும், தமிழக மகளிருக்குப் பெருமை சேர்த்தவருமான மருத்துவர் சாந்தா அவர்கள் இயற்கை எய்திய செய்தி அறிந்து வருந்துகின்றேன்.

1954 ஆம் ஆண்டு நிறுவப் பெற்ற அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சிக் கழகத்தில், 1955 ஆம் ஆண்டு பயிற்சி மருத்துவராக சேர்ந்த மருத்துவர் சாந்தா, கடந்த 65 ஆண்டுகளுக்கும் மேலாகப் பொறுப்பு வகித்து வரலாறு படைத்து இருக்கின்றார்.

தமிழ்நாட்டில் யாருக்கேனும் புற்றுநோய் என்று தெரிய வந்தால், உடனடியாக அவர்கள் நினைவுக்கு வருவது சாந்தா என்ற பெயர்தான். அந்த அளவிற்கு பொறுப்புடனும், கடமை உணர்ச்சியுடனும் தொண்டு ஆற்றி இருக்கின்றார்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த காலத்தில், அடையாறு மருத்துவ மனையில்தான் சேர்க்கப்பட்டு இருந்தார்.

அந்தக் காலகட்டத்தில் புற்றுநோய் வந்தால் பிழைக்க முடியாது என்ற நிலைதான் இருந்தது. அதன்பிறகு கடந்த 50 ஆண்டுகளில் அடையாறு புற்றுநோய் மருத்துவ கழகம் மிகப்பெரிய வளர்ச்சி பெற்று, புற்று நோய் மருத்துவத்தில் அனைத்து இந்தியாவிலும் முன்னோடியாகத் திகழ்கின்றது.

அதற்கான பெருமையில் பெரும்பங்கு மருத்துவர் சாந்தா அவர்களுக்கே சாரும். ஏழை எளிய மக்களும், எல்லோரும் எளிதில் அணுகக் கூடியவராக மருத்துவர் சாந்தா திகழ்ந்தார்.

எத்தனையோ நோயாளிகளுக்கு நான் பரிந்துரை செய்து அனுப்பி இருக்கின்றேன். அதற்காக அவருடன் பலமுறை பேசி இருக்கின்றேன். கனிவுடன் கேட்பார்; இயன்ற உதவிகள் அனைத்தும் செய்வார். பணம் அவருக்கு ஒரு பொருட்டு அல்ல. மருத்துவ அறத்துடன் இயங்கினார். அதனால் எத்தனையோ பெரிய நிறுவனங்கள் அடையாறு புற்றுநோய் மருத்துவ கழகத்திற்கு நன்கொடைகளை அள்ளி வழங்கி வருகின்றார்கள்.

பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய சிறப்புகளை இந்திய அரசு அவருக்கு வழங்கி இருக்கின்றது. ஆசியாவின் மிகப்பெரிய விருதான பிலிப்பைன்ஸ் நாட்டின் ராமன் மகசேசே விருது பெற்று இருக்கின்றார்.

அந்தவகையில் தனக்கு கிடைத்த பணம் முழுமையும் அடையாறு புற்றுநோய் மருத்துவ கழகத்திற்கு வழங்கிவிட்டார்; தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில், என்றைக்கும் அழியாத இடத்தைப் பெற்றுவிட்டார் அவர் புகழ் வாழ்க, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : someone ,Tamil Nadu ,Santa ,Vaiko , Vaiko, condolences
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...