ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணையில், 69 அடி வரை மட்டுமே தண்ணீர் தேக்கப்படும். அதன்பின் பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படும். ஆனால், இந்தாண்டு அனைத்து பகுதிகளுக்கும் போதுமான அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், அணையில் முழுக்கொள்ளளவான 71 அடி வரை தண்ணீரை தேக்கி, தேவையானபோது பயன்படுத்த பொதுப்பணித்துறை முடிவு செய்தது. இதன்படி, தற்போது வைகை அணையின் நீர்மட்டம் 70.39 அடியாகவும், நீர்வரத்து 2,352 கனஅடியாகவும் உள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி, 2,139 கனஅடி நீரை வெளியேற்றி வருகின்றனர். வைகை அணையில் கடைசியாக கடந்த 2008ல் 71 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது 70.39 அடி வரை தண்ணீர் தேக்கப்பட்டுள்ளது. இதனால், அணை கடல்போல காட்சியளிக்கிறது.