சென்னை: உறுப்பினர்கள், ராஜினாமா செய்துவிட்டு எந்த அரசியல் கட்சியிலும் சேரலாம் என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி துவங்க இருப்பதாக கூறினார். திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பிறகு, தனது உடல்நிலையை காரணமாக கூறி, அரசியல் கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் அதிருப்தி அடைந்தனர். இந்நிலையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் 4 பேர் திமுகவில் இணைந்தனர்.
இது குறித்து ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி சுதாகர் நேற்று வெளியிட்ட அறிக்கை: ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம் போல் எந்த அரசியல் கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம். அவர்கள் வேறு கட்சியில் இணைந்தாலும் அவர்கள் எப்போதும் ரஜினி ரசிகர்கள்தான் என்பதை ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள் யாரும் மறந்துவிடக் கூடாது. இவ்வாறு கூறியுள்ளார்.