சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் கல்பாக்கம், மராட்டியத்தின் தாராப்பூர் ஆகிய இடங்களில் உள்ள அணுமின் நிலையங்களில் பொறியியல் பட்டயப்படிப்பு படித்தவர்களில் 50 பேருக்கும் 12ம் வகுப்பு அல்லது ஐடிஐ படித்தவர்களில் 110 பேருக்கும் மாதாந்திர உதவித் தொகையுடன் கூடிய பயிற்சி வழங்கப்படவுள்ளது. இந்த பயிற்சியிடங்களுக்கான போட்டி தேர்வுகள் அனைத்தும் மும்பையில் மட்டுமே நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த ஏழை மாணவர்களுக்கு அடிப்படையில் சாத்தியமல்ல. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு இந்த பணிகள் கிடைக்காமல் போவதற்கும் இந்த விதிமுறைகள் வழிவகுத்து விடும்.
இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் குறைந்தது 5 இடங்களிலாவது தேர்வு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.