புதுடெல்லி: அயோத்தியில் பாபர் மசூதி கட்டும் பணி வரும் 26ம் தேதி குடியரசு தினத்தில் தேசியக் கொடி ஏற்றியும், மரக்கன்றுகள் நட்டும் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் இடத்தில் இருந்து 25 கிமீ தொலைவில் பாபர் மசூதி கட்ட இடம் ஒதுக்கி தரப்பட்டுள்ளது. ராமர் கோயில் கட்ட பிரதமர் மோடி கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி அடிக்கல் நாட்டினார். இதைத் தொடர்ந்து விரைவில் கோயில் கட்டும் பணி தொடங்க உள்ளது.
இந்நிலையில், மசூதி கட்ட இந்தோ - இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது. குடியரசு தினமான வரும் 26ம் தேதி மசூதி கட்டுவதற்கான பணிகள் தொடங்க ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய நாளில் மசூதி அமையும் இடத்தில் தேசியக் கொடியேற்றியும் மரக்கன்றுகள் நட்டும் முறைப்படி திட்டத்தைத் தொடங்க இருப்பதாக இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. கடந்த மாதம் இந்தோ- இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையானது புதிய மசூதிக்கான வரைபடத்தை வெளியிட்டது. மசூதி வளாகத்தில் மருத்துவமனை, நூலகம், சமுதாய கூடம், மியூசியம் போன்றவையும் இடம் பெற உள்ளது.