திருவனந்தபுரம்: கேரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.12 கோடி நெல்லை மாவட்ட எல்லையான ஆரியங்காவில் விற்பனையாகி உள்ளது. எனவே இந்த பரிசுக்கான அதிர்ஷ்டசாலி தமிழகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என கருதப்படுகிறது. ேகரள அரசின் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர் லாட்டரியின் முதல் பரிசு ரூ.12 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இதற்கான டிக்கெட் விற்பனை தொடங்கியது. இந்த நிலையில் நேற்று இதற்கான குலுக்கல் மேயர் ஆரியா ராஜேந்திரன் தலைமையில் நடந்தது. இதில் முதல் பரிசு ரூ.12 கோடி ‘எக்ஸ்ஜி 358753’ என்ற எண்ணுள்ள டிக்கெட்டுக்கு கிடைத்துள்ளது.
இந்த டிக்கெட் தமிழக எல்லையான ஆரியங்காவில், தென்காசியை சேர்ந்த வெங்கடேஷ் நடத்திவரும் லாட்டரி கடையில் விற்பனையாகி உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள மொத்த விற்பனையாளரிடம் இருந்து டிக்கெட்டுகளை வாங்கி உள்ளார். கடந்த 2010ம் ஆண்டு கோடை பம்பர் பரிசு ரூ.2 கோடி, வெங்கடேஷ் விற்ற லாட்டரிக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நெல்லை மாவட்ட எல்லையில் விற்பனை ஆகி உள்ளதால் சபரிமலை அல்லது ஆரியங்காவு தர்மசாஸ்தா கோயிலுக்கு வந்த தமிழக பக்தர்கள் வாங்கியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஆனால் அந்த அதிஷ்டசாலி யார்? என்பது இதுவரை தெரியவில்லை. அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.