திருச்சி: வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக தி.மு.க. சார்பில் பிரமாண்ட மாநில மாநாட்டினை நடத்த தலைமை முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. திமுகவின் முதல் மாநாடு 1952-ல் சென்னையில் நடந்தது. தொடர்ந்து, 2வது மாநில மாநாடு 1956ம் ஆண்டு திருச்சியிலும் நடந்தது. 1970, 1993, 2014 என 4 மாநாடுகள் திருச்சியில் நடந்துள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க. பிரதிநிதிகள் மாநாடும் திருச்சியில் பிரமாண்டமாக நடத்தப்பட்டது. இதுவரை நடந்த தி.மு.க.வின் 10 மாநில மாநாடுகளில் 5 மாநாடுகள் திருச்சியில் நடந்துள்ளன.
தற்போது 11வது தி.மு.க. மாநில மாநாட்டை திருச்சி மாவட்டம் சிறுகனூரில் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூர் பகுதியில் 200 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் மாநாட்டின் ஆயத்தப் பணிகள் இன்று முதன்மை செயலாளர் கே.என்.நேரு துவக்கி வைத்தார். 2014ல் திமுக மாநாடு பிப்ரவரி மாதம் நடந்தது. இதனால் 2021ல் 11வது மாநில மாநாடும் வரும் பிப்ரவரி மாதம் நடைபெறலாம் என்றும், இதுபற்றி கட்சி தலைவர் அறிவிப்பார் என்றும் திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு கூறினார்.