பொன்னேரி: சோழவரம் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஞாயிறு ஊராட்சியில் திமுக ஒன்றிய செயலாளர் வழுதிகை நா.செல்வசேகரன் ஏற்பாட்டில், நேற்று மாலை மக்கள் சபை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் க.சுந்தரம், பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அவரிடம், அதிமுக ஆட்சியில் தங்களுக்கான அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரவில்லை. கழிப்பிடம், சாலை, சுடுகாட்டு பாதை, எரிமேடை, முதியோர் உதவித்தொகை, அரசு பள்ளி கட்டிடம், மகளிருக்கான சுயவேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து கிராம மக்கள் மனு அளித்தனர்.
கூட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அருண் தலைமையில் 50க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திமுகவில் இணைந்தனர். அவர்களுக்கு முன்னாள் அமைச்சர் சால்வை அணிவித்து வாழ்த்தினார். இதில் நிர்வாகிகள் வேணுகோபால், அமர்காந்தி, பூபாலன். ஜெயிலானி, ஜனார்த்தனன், ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜேந்திரன் மற்றும் இளைஞரணி, மகளிரணி உள்பட 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.