பூந்தமல்லி: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 104வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பூந்தமல்லி குமணன்சாவடி ஞானசுந்தர விநாயகர் கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த மேடையில் எம்ஜிஆரின் உருவப்படம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு பூந்தமல்லி நகராட்சி முன்னாள் தலைவர் பூவை ஞானம் தலைமை வகித்தார். அமைச்சர் பெஞ்சமின், எம்ஜிஆரின் உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் ஏழைப் பெண்கள் ஆயிரம் பேருக்கு பூவை ஞானம், புடவைகள் மற்றும் அன்னதானம், இனிப்புகளை வழங்கினார்.
பூந்தமல்லியில் உள்ள 21 வார்டுகளிலும் அன்னதானம் நடைபெற்றது. இதேபோல் பூந்தமல்லியில் பல்வேறு இடங்களில் நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் கே.எஸ். ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பெஞ்சமின் கொடியேற்றி இனிப்புகள் வழங்கினார். இதில் ஜாவித் அகமது, முன்னாள் எம்.எல்.ஏ. இரா.மணிமாறன், தேவேந்திரன், அந்தமான் முருகன், சார்லஸ், கோபிநாத், ஹரிக்குமார், வாட்டர் சீனிவாசன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.