×

கொடைக்கானலில் மழை குறைந்தது இயல்பு நிலைக்கு திரும்பிய ‘இளவரசி’: சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர்

ஆண்டிபட்டி: கொடைக்கானலில் மழை குறைந்ததால் நகரம் இயல்பு நிலைக்கு திரும்பியது. விடுமுறையையொட்டி குவிந்த சுற்றுலாப்பயணிகள், பல்வேறு இடங்களை கண்டுகளித்தனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் ‘மலைகளின் இளவரசி’ என அழைக்கப்படுகிறது. கடந்த 4 நாட்களாக நகர் பகுதியில் தொடர் மழை பெய்து வந்தது. இதனால் பொங்கல் விடுமுறையையொட்டி கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகள் எண்ணிக்கையும் குறைந்தது. நேற்று முன்தினம் மாலை முதல் மழை குறைய தொடங்கியது. இதனால் நகர் இயல்பு நிலைக்கு திரும்பியது. மழை இல்லாமல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

இதையடுத்து இதமான சூழலில் பொங்கல் விடுமுறையை கொண்டாட நகரில் நேற்று சுற்றுலாப்பயணிகள் அதிக அளவில் குவிந்தனர். நகரில் உள்ள மோயர் பாயிண்ட், பைன் பாரஸ்ட், தூண்பாறை, கோக்கர்ஸ் வாக், கொடைக்கானல் ஏரி, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட அனைத்து சுற்றுலா இடங்களையும் சுற்றுலாப்பயணிகள் கண்டுகளித்தனர். இதனால், நகரில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தொடர் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, வட்டக்கானல் நீர்வீழ்ச்சி, கரடிசோலை நீர்வீழ்ச்சி உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளில் மழை நீர் கொட்டுகிறது. இவைகளையும் சுற்றுலாப் பயணிகள் கண்டுகளித்தனர்.

Tags : Princess ,Kodaikanal , In Kodaikanal, rain is low, normalcy, Princess
× RELATED பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டனுக்கு புற்றுநோய் என அதிர்ச்சி தகவல்