திருவனந்தபுரம்: நடிகையை கடத்தி பலாத்காரம் செய்த வழக்கில் நடிகர் திலீப் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் சில திருத்தங்களை செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மலையாள சினிமாவின் முன்னணி நடிகை ஒருவர், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, இரவில் காரில் சென்று கொண்டிருந்த போது, வழியில் ஒரு கும்பல் அவரை கடத்தி பலாத்காரம் செய்தது. இது தொடர்பாக அவரது முன்னாள் டிரைவர் பல்சர் சுனில் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையில், பிரபல நடிகர் திலீப் இதற்கான சதித்திட்டம் தீட்டியது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை போலீசார் கைது செய்தனர். 85 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர்அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு சிறப்பு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் திலீப் மீதான குற்றச்சாட்டுகளில் மாற்றங்களை செய்ய போலீஸ் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு திலீப் எதிர்ப்பு தெரிவித்தார். இருப்பினும், குற்றச்சாட்டுகளில் சில மாற்றங்களை செய்ய உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. * நடிகை பலாத்கார வழக்கின் ரகசிய விசாரணை வரும் 21ம் தேதி மீண்டும் தொடங்குகிறது. இந்த வழக்கில் அப்ரூவரான விபின்லால், திலீபின் தற்போதைய மனைவி காவியா மாதவன் உட்பட சிலரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.