×

‘‘நீங்க பேசுங்க... இல்லை.. நீங்க பேசுங்க..’’ ஓபிஎஸ், இபிஎஸ் பனிப்போர் பகிரங்கம்

அலங்காநல்லூர்:அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் வாடிவாசலில் இருந்து வந்த கோயில் காளைகளுக்கு முதல்வர், துணை முதல்வர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் போட்டோவிற்கு போஸ் கொடுத்தனர். அமைச்சர் உதயகுமார் மண்டியிட்டு கீழே அமர்ந்தார். இதனைக் கண்ட துணை முதல்வர் ஓபிஎஸ் பதறிப் போய், எழுந்து நில்லுங்கள் என்றார். அவர் எழுந்து நின்ற பிறகே பதற்றம் குறைந்தது.

பின்னர் ஜல்லிக்கட்டு விழா மேடையில் ஏறியதும் அமைச்சர் உதயகுமார், ‘உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டை முதல்வர் துவக்கி வைத்து பேசுவார்’ என்று அறிவித்தார். ஆனால், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ‘துணை முதல்வர் பேசிய பிறகு நான் பேசுகிறேன். கடைசியாகத்தான் முதல்வர் பேச வேண்டும்’ எனக் கூறி விட்டார். அப்போது துணை முதல்வர், ‘இது அரசு விழா இல்லை. நீங்களே முதலில் பேசுங்கள்’ என்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இருவரும் ஒருவரை ஒருவர் வலியுறுத்திய நிலையில், வேறு வழியின்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமியே எழுந்து மைக்கில் பேசினார். அதன் பிறகு கடைசியாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.
பொதுவாக அரசு விழாக்களில் முதல்வர் இறுதியாக பேசுவதும், துணை முதல்வர் அவருக்கு முன்னதாக பேசுவதும்தான் மரபு. ஆனால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விழாவில் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே நடந்த இந்த சம்பவம், இருவருக்கும் இடையே உள்ள பனிப்போரை பகிரங்கமாக காட்டியது.


Tags : public ,OBS , OBS, EPS
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...