தேன்கனிக்கோட்டை: கெலமங்கலம் அருகே யானைகள் அட்டகாசத்தால் தக்காளி தோட்டம் நாசமடைந்தது. யானைகளை கர்நாடக வனப்பகுதிக்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே ஊடேதுர்கம், பேவநத்தம் ஆகிய வனப்பகுதியில் 60 யானைகள் முகாமிட்டுள்ளன. நேற்று முன்தினம் இரவு, 40க்கும் மேற்பட்ட யானைகள் கெலமங்கலம் அருகே உள்ள காளிநாயகனப்பள்ளி கிராமத்தில் ராகி, சோளம், தக்காளி, முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்கள் நாசம் செய்தன.
அதில் ராஜகோபால் என்பவரது 3 ஏக்கர் தக்காளி தோட்டத்தை, யானைகள் மிதித்து நாசம் செய்து சென்றன. இதுகுறித்து விவசாயி ராஜகோபால் கூறுகையில், ‘யானை கூட்டம் புகுந்து பயிர்களை நாசம் செய்து சென்றுள்ளது. சேதமடைந்த பயிர்களுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றார்.