×

தொழில் நஷ்டத்தால் வியாபாரி குடும்பத்துடன் விஷம் அருந்தி தற்கொலை: மனைவி, மகள் பரிதாப சாவு: வியாபாரி கவலைக்கிடம்

சென்னை: சென்னைக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியில் நேற்று முன்தினம் மாலை ஒரு சடலம் மிதப்பதாக செங்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஒரு பெண்ணின் சடலம் மிதப்பதையும், அதன் அருகே முதியவர் ஒருவர், ஏரிக்கரையை பிடித்தபடி மயங்கி கிடப்பதையும் கண்டனர். விரைந்து செயல்பட்ட போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர், அப்பெண்ணின் சடலத்தையும், முதியவரையும் பத்திரமாக மீட்டனர்.
மயங்கி கிடந்த முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து விசாரித்தபோது, அவர், சென்னை அம்பத்தூர் அருகே ஒரகடம், வெங்கடேஸ்வரா நகர், ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் (50) என்பதும் அம்பத்தூர் பகுதியில் நிதி நிறுவனம் மற்றும் தீபாவளி சீட்டு நடத்தி வருவதும், இவருக்கு  லதா (45) என்ற மனைவியும், ரேஷ்மா(18), மோகன்(16) என மகளும், மகனும் இருப்பதும் தெரிய வந்தது. ரேஷ்மா, அண்ணாநகரில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார்.

 வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தினால் சிவகுமார் மனமுடைந்தார். இதனால் குடும்பத்துடன் விஷமருந்தி, புழல் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார். அதன்படி, கடந்த சில தினங்களுக்கு முன்,  பொங்கலுக்கு துணிகள் எடுக்க போவதாக மோகனிடம் கூறிவிட்டு, லதா, ரேஷ்மா ஆகியோருடன் புழல் ஏரிக்கு சிவகுமார் வந்தார். அங்கு, தயாராக கொண்டு வந்த விஷத்தை 3 பேரும் குடித்துவிட்டு, ஏரியில் குதித்தனர்.  இதில் லதா, ரேஷ்மா ஆகியோர் ஏரியில் மூழ்கி சம்பவ இடத்திலேயே, பரிதாபமாக உயிரிழந்தனர். சிவகுமார் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அவர்களில் லதாவின் உடலை கடந்த 13ம் தேதி மாலையும், ரேஷ்மாவின் உடலை நேற்று முன் தினமும் போலீசார் மீட்டனர். இரு உடல்களும் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சிவகுமார் ஸ்டான்லி மருத்துவமனையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக,   செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : businessman ,death ,Trader , Suicide due to poisoning with businessman's family due to job loss: Wife, daughter tragic death: Trader worried
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்