மும்பை: இந்தியாவில் சுமார் 30 லோன் ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில் இருந்து கூகுள் நீக்கியுள்ளது. டிஜிட்டல் மயமாகியுள்ள நிலையில், ஸ்மார்ட் போன்கள் மூலம் விரைவாக கடன் வழங்கும் நடைமுறை தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. இதற்கென இந்தியாவில் கடன் வழங்குவதற்கு ஆப்ஸ்கள் உள்ளன. பின் விளைவுகளை பற்றிக்கூட கவலைப்படாமல், அவசர தேவைக்கு பலர் இந்த ஆப்ஸ்கள் மூலம் கடன் வாங்குகின்றனர். டிஜிட்டல் கேஒய்சியை மட்டுமே அடிப்படையாக கொண்டு உடனே கடன் வழங்கப்படுகிறது. ஆனால், கடனை செலுத்த முடியாமல் நிறுவனங்களின் மிரட்டல் உள்ளிட்ட நெருக்கடிகளுக்கு ஆளாக நேரிடுகிறது. கடன் வாங்கியவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.
இத்தகைய ஆப்ஸ்கள் தொடர்பாக பயனாளர்களிடம் இருந்து புகார்கள் வந்துள்ளன. இத்தகைய ஆப்ஸ்கள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு உட்பட்டதாக இல்லை. இதைத்தொடர்ந்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட ஆப்ஸ்களை கூகுள் நிறுவனம் ஆய்வு செய்துள்ளது. இதில், சுமார் 30 ஆப்ஸ்களை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கி நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆப்ஸ்கள், கடன் வழங்குவதற்கு அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. கடன் வாங்குவோரிடம் அதிக வட்டிக்கு கடன் கொடுத்துள்ளன. நீக்கப்பட்டவை தவிர பிற லோன் ஆப்ஸ்களுக்கு, ரிசர்வ் வங்கி விதிமுறைகளை பூர்த்தி செய்யாவி–்ட்டால் பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.