×

நாளை காணும் பொங்கல் விழா பழவேற்காட்டில் படகு சவாரிக்கு தடை

திருவள்ளூர்: காணும் பொங்கலையொட்டி பூண்டி மற்றும் பழவேற்காடு ஏரிகளில் குளிக்கவும், பழவேற்காடு பகுதியில் படகு சவாரிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் எஸ்.பி., அரவிந்தன் எச்சரித்துள்ளார். காணும் பொங்கல் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி. சென்னை மற்றும் காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் பழவேற்காடு கடல் பகுதிக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா தலமான இங்கு, சமஸ்வரர் ஆலயம், ஆதி நாராயணன் பெருமாள் கோயில், மகிமை மாதா கோயில், சின்ன மசூதியில் 800 ஆண்டு பழமைவாய்ந்த நிழல் கடிகாரம், கலங்கரை விளக்கம், டச்சு கல்லறை ஆகியவை உள்ளன. இதை காண பல்லாயிரக்கணக்கானோர் கூடுவார்கள். மேலும், பறவைகள் சரணாலயத்தை காண படகுகளில் சவாரி மேற்கொள்வார்கள். இதனால், படகு விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ வாய்ப்புள்ளது. எனவே, பழவேற்காடு கடலில் படகு சவாரிக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். மேலும், கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொன்னேரி டிஎஸ்பி தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்கு தயார் நிலையில் உள்ளனர். இதேபோல் பூண்டி நீர்த்தேக்க பகுதியிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பூண்டி ஏரிக்கு செல்லும் நுழைவு வாயிலில், சோதனைச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது. சோதனைச்சாவடியின் முன்பே வாகனங்கள் நிறுத்தவும் தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. பூண்டி ஏரியில் குளிப்பதற்கும் போலீசார் தடை விதித்துள்ளனர். பூண்டி நீர்த்தேக்கம், அருங்காட்சியகம், கற்கால மனிதர்கள் வாய்ந்த காட்சிகள், பூங்கா ஆகிய பகுதிகளில் திருவள்ளூர் தாலுகா போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.


Tags : Boat ride ,Pongal ,festival , Viewing Pongal, fruit orchard, boat ride, prohibited
× RELATED அழகு நாச்சியம்மன் கோயில் பொங்கல் விழா