மும்பை; போலி கால்சென்டர் நடத்தி வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் பெற்ற கடனை மோசடியாக வசூலித்த 11 ேபர் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மும்பை புறநகர் பகுதியான காட்கோபரில் போலி கால் சென்டர் நடத்தி வங்கிகளில் பெற்ற கடன் தொகையை வாடிக்கையாளர்களிடம் மோசடியாக வசூலிப்பதாக மும்பையை சேர்ந்த முதியவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் கடந்த திங்கட்கிழமை அங்கு சென்று நடத்திய அதிரடி சோதனையில் மோசடியில் ஈடுபட்ட 6 பெண்கள் மற்றும் 5ஆண்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் அங்கிருந்து 132 சிம் கார்டுகள், 11 கம்ப்யூட்டர்கள், 7 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இந்த கால் சென்டர் போலி என்பதும் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் செயல்படுவதும் தெரியவந்தது. வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்கள் விவரங்களை சேகரித்து அவர்களை கால்சென்டரில் பணியாற்றுபவர்கள் போனில் தொடர்பு கொள்வார்கள்.
அப்போது தாங்கள் நிதி நிறுவனங்களில் பணிபுரிவதாக கூறுவார்கள். கொரோனா ஊரடங்கை சாதமாக பயன்படுத்தி தங்களிடம் பணத்தை செலுத்தினால் கடன் பெற்ற தொகையில் சலுகை அளிப்பதாக கூறுவார்கள். இதை நம்பி கடன் பெற்றவர்கள் குறைந்தளவு பணத்தை செலுத்துவார்கள். அதற்கு போலியான ரசீது கொடுத்து ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் உண்மையான நிதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கடன்பெற்றவர்களை தொடர்புகொள்ளும்போது ஏற்கனவே வசூலித்தவர்கள் மோசடி பேர் வழிகள் என தெரியவந்தது. இதையடுத்து பிடிபட்ட 11 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.