×

தமிழில் அஞ்சல்துறை தேர்வு மத்திய அரசுக்கு டி.ஆர்.பாலு கடிதம்

சென்னை: அஞ்சல்துறை தேர்வை தமிழிலும் நடத்த வேண்டும் எனக்கூறி மத்திய தபால் துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்துக்கு, திமுக பொருளாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து டி.ஆர்.பாலு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்திய அஞ்சல் துறையின், தமிழ் நாட்டு பிரிவிற்கு, கணக்காளர்களை துறைத்தேர்வு மூலம் தேர்வு செய்ய சென்னை மண்டல தலைமை தபால் துறை அதிகாரியினால் வெளியிடப்பட்ட பொது அறிவிக்கையில் வருகின்ற பிப்ரவரி 14ம் தேதியன்று நடைபெறவுள்ள தேர்வில், ஆங்கிலம் அல்லது இந்தி மொழி வாயிலாக மட்டுமே தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மொழி மற்றும் தமிழ் இளைஞர்களின் உணர்வை மதிக்கும் வகையிலும், மாநிலங்களவையில் தாங்கள் அளித்த உறுதிமொழியை பாதுகாக்கும் வகையிலும், தமிழ் இளைஞர்களுக்கு இழைக்கப்படும் அவமானத்தையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். எனவே, அஞ்சல் துறையில் வெளியிடப்பட்டுள்ள அறிவிக்கையை உடனடியாக ரத்து செய்து, தமிழ்மொழி வாயிலாகவும் கணக்காளர்களுக்கான தேர்வு நடத்தபடுமென புதிய அறிவிக்கை வெளியிட்டு, தமிழக இளைஞர்களின் வாழ்வில் ஒளியேற்றுவதோடு, இந்திய அரசியல் சட்டத்தின் கூட்டாட்சித் தன்மையும் பாதுகாக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Palu ,Central Government ,examination , DR Palu's letter to the Central Government for the postal examination in Tamil
× RELATED ரயில், பேருந்து பயணத்தின்போது சலுகை...