நாமக்கல்: நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம், நேற்று திரையரங்குகளில் வெளியானது. நாமக்கல்-சேலம் சாலையில் உள்ள திரையரங்கில் நேற்று காலை படம் திரையிடப்பட்டது. அதிகாலையில் இருந்தே ரசிகர்கள் கூட்டம், கூட்டமாக திரையரங்கு முன் திரண்டனர். காலை 9.30 மணியளவில், திரையரங்கம் முன்பு நின்றிருந்த ரசிகர்கள் 50க்கும் மேற்பட்டோர், திடீரென சாலையின் நடுவே திரண்டு வந்து நடனமாடினர். அப்போது, அவ்வழியாக சென்ற பஸ்சை வழிமறித்து நிறுத்தினர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை கண்டு, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். ரசிகர்களில் சிலர் மது அருந்தி இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து, அவர்கள் மீது லேசான தடியடி நடத்தி, அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.