×

டெல்டாவில் 2வது நாளாக கனமழை 2.41 லட்சம் ஏக்கர் சம்பா சேதம்

திருச்சி: டெல்டா மாவட்டத்தில் 2வது நாளாக நேற்றும் கனமழை நீடித்ததால் 2.41 லட்சம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில் சாய்ந்துள்ளது.இலங்கை மற்றும் குமரிக்கடல் பகுதியில் நேற்றுமுன்தினம் நிலை கொண்ட வளிமண்டல மேல்அடுக்கு சுழற்சி தற்போது அதே இடத்தில் நிலை  கொண்டுள்ளது. காற்றழுத்த சுழற்சி சற்று வலுப்பெற்றுள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. டெல்டா மாவட்டத்திலும் கனமழை  பெய்து வருகிறது. நாகை, திருவாரூர், தஞ்சை, திருச்சி, புதுகை உள்ளிட்ட மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் மதியம் முதல் நேற்று வரை  இடைவிடாமல் கனமழை பெய்தது. இதனால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கியது.நாகை மாவட்டத்தில் நாகையில் 200 ஏக்கர், கீழ்வேளூர், திருமருகல், கீழையூர், வேதாரண்யத்தில் 1லட்சத்து 5ஆயிரம் ஏக்கர், மயிலாடுதுறையில்  10ஆயிரம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 50ஆயிரம் ஏக்கர், தஞ்சை மாவட்டத்தில் 60 ஆயிரம் ஏக்கர், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே  கே.பேட்டை, வதியம், மனகட்டை, மருதூர், வளையபட்டி, இனிங்கூர் உள்ளிட்ட பகுதிகளில் 5ஆயிரம் ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழை நீரில்  சாய்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் திருச்சி, திருவெறும்பூர், மணிகண்டத்தில் 1000 ஏக்கர் என டெல்டா மாவட்டம் முழுவதும் 2லட்சத்து 41ஆயிரத்து 200 ஏக்கர் சம்பா பாதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டெல்டா மாவட்ட விவசாயிகள் கூறுகையில், டெல்டா மாவட்டத்தில் நிவர் மற்றும் புரெவி புயலால் கனமழைக்கு ஏற்கனவே 3.50லட்சம்  ஏக்கர் சம்பா பயிர் நாசமானது. இந்நிலையில் மீண்டும் தொடர் கனமழையால் பால்பிடிக்கும் பருவம் மற்றும் 10 நாளில் அறுவடைக்கு தயாராக இருந்த  நெற்பயிர்கள் மழைநீரில் சாய்ந்து சேதமடைந்துள்ளது. கதிருடன் நெற்பயிர்கள் சாய்ந்ததால் அறுவடை செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள்  தள்ளப்பட்டுள்ளனர். இதில் நெற்பயிர் பதராகிவிடும். இனி மகசூலும் கிடைக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து மழை பெய்தால் பயிர்கள்  முளைத்துவிடுவதோடு, பலத்த சேதம் ஏற்படும். எனவே வருவாய், வேளாண்துறை அதிகாரிகள் சேதமடைந்த வயல்களை நேரில் பார்வையிட்டு  முறையாக கணக்கெடுப்பு நடத்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கூறினர்.

Tags : Delta , 2.41 lakh acres of samba damaged by heavy rains in Delta for 2nd day
× RELATED I.N.D.I.A. கூட்டணிக்கு டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த 16 விவசாய அமைப்புகள் ஆதரவு..!!