×

எதுக்கு போராடுகிறோம் என்றே தெரியாது: விவசாயிகள் குறித்து பாஜ எம்பி சர்ச்சை கருத்து..!!

புதுடெல்லி: உத்தரபிரதேச மாநிலம் மதுரா தொகுதி பாஜக எம்பியும், நடிகையுமான ஹேமா மாலினி, விவசாயிகள் போராட்டம் குறித்து ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், ‘மத்திய அரசு கொண்டுவந்த புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விவசாயிகளுக்கு, தங்களுக்கு என்ன வேண்டும் என்றோ, அந்த சட்டங்களால் தங்களுக்கு என்ன பிரச்சினை என்று கூட தெரியாது. அவர்கள் ஒருவரின் வழிகாட்டுதலின் பேரில்,  விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடுகிறார்கள். யாரோ ஒருவர் போராட சொன்னதால் அவர்கள் போராடி வருகிறார்கள’ என்று சர்ச்சையை ஏற்படுத்தும்படி பேசினார்.

இவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே கர்நாடக பாஜக எம்பி எஸ்.முனிசாமி, ‘டெல்லியின் எல்லையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு பணம் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், பணம் கொடுத்து அவர்கள் போராட்ட களத்துக்கு அழைத்து வரப்படுகிறார்கள். வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடுபவர்கள் இடைத்தரகர்கள் மற்றும் போலி விவசாயிகள். அவர்கள் பீட்சா, பர்கர் சாப்பிடுகிறார்கள்’ என்றார். இதேபோல், ராஜஸ்தான் பாஜக எம்.எல்.ஏ மதன் திலாவர் என்பவர், ‘போராட்டில் ஈடுபட்டுள்ளவர்கள் சிக்கன் பிரியாணி சாப்பிடுகின்றனர். அவர்கள் மூலம் பறவைக் காய்ச்சல் பரப்ப சதித்திட்டம் தீட்டப்படுகிறது. போராட்ட களத்தில் இருப்பவர்களில் விவசாயிகளின் எதிரிகளும் இருக்கலாம். அவர்களை அங்கிருந்து அகற்றவில்லை என்றால், பறவைக் காய்ச்சல் பரவல் ஒரு பெரிய பிரச்னையாக மாறும்’ என்றார். இதற்கிடையே டெல்லி எல்லையில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தில் காலிஸ்தானியர்கள் ஊடுருவியுள்ளதாக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் நேற்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Tags : BJP , Farmers, BJP MP, controversy, opinion
× RELATED பாஜ ஆட்சிக்கு வந்தால் தேர்தல்...